“மார்கழியில் மக்களிசை” - பறை இசைத்து தொடங்கி வைத்த கனிமொழி, வெற்றிமாறன், ஜிவி பிரகாஷ்!
சென்னை: "மார்கழியில் மக்களிசை" நிகழ்ச்சியை பறை இசை அடித்து திமுக எம்.பி கனிமொழி, இயக்குநர் வெற்றிமாறன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் பா.ரஞ்சித் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
தமிழ்நாடு முழுவதும் பெருநகரங்களில் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் தொடர்ந்து நடத்தி வருகிறது. மார்கழி மாதம் என்றாலே பொதுவாக கர்னாடக சங்கீதம் என்கிற நிலை மாறி நாட்டுப்புற இசை, பறை இசை, ராப் இசை என பல்வேறு இசை வகைகள் ஒரே இடத்தில் அரங்கேற்றப்படுகிறது.

சென்னையில் பல்வேறு தரப்பு ரசிகர்களின் பங்களிப்புடன் வெற்றிகரமாக 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சி, 6வது முறையாக இந்த ஆண்டும் தொடங்கி உள்ளது. சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ள பச்சையப்பன் கல்லூரியில் நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் 6 ஆம் ஆண்டு 'மார்கழியில் மக்களிசை' நிகழ்ச்சி இன்று தொடங்கியது. வரும் 28 ஆம் தேதி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திமுக எம்.பி கனிமொழி, இயக்குநர் வெற்றிமாறன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் பா.ரஞ்சித் ஆகியோர் இன்று பறை அடித்து மார்கழியில் மக்களிசை நிகழ்வை தொடங்கி வைத்தனர்.
"செய்யும் வேலை நேர்மையாக இருப்பதால்தான் இவ்வளவு பேர் ஆதரிப்பதாக நம்புகிறேன். கலை மக்களுக்கானது, அதை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் வேலையை நீலம் பண்பாட்டு மையம் அம்பேத்கர் வழியில் நின்று தொடர்ந்து செய்யும்" என மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசியுள்ளார். மேலும், கனிமொழி நடத்திய சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் இருந்து தான் எனக்கு இது போன்ற நிகழ்ச்சி நடத்துவதற்கு எண்ணம் தோன்றியது என பா.ரஞ்சித் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கனிமொழி எம்.பி பேசுகையில், "நம் கலை வடிவங்களை, மொழியை பறித்துக்கொண்டே இருக்கிறார்கள். நம் பறையை கூட யார் யாரோ எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த இசை நமது என்று சொல்லக்கூடிய மேடையாக இதனை மாற்றி இருக்கிறார் பா.ரஞ்சித். 6 ஆண்டுகளாக மக்களிசையை கொண்டாடக்கூடிய நிகழ்வை நிகழ்த்திக் காட்டிக்கொண்டிருப்பதே மிகப்பெரிய வெற்றி" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications