பொங்கல் விடுமுறை: மெரினாவில் குவிந்த 116 மெட்ரிக் டன் குப்பை! கஷ்டப்பட்டு அகற்றிய சென்னை மாநகராட்சி
சென்னை: பொங்கல் விடுமுறை காரணமாக, சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் ஏராளமான மக்கள் குவிந்தனர். மெரினாவில் குப்பையை கொட்டினால் ரூ.5000 அபராதம் என அறிவிக்கப்பட்டிருந்தும், மெரினாவில் 116 மெட்ரிக் டன் குப்பை சேர்ந்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், பாலவாக்கம், நீலாங்கரை, திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் உள்ள கடற்கரையில் பொங்கல் விடுமுறையை ஒட்டி ஏராளமான மக்கள் குவிந்தனர்.

சென்னை கடற்கரைகள்
வழக்கமாக, இந்த கடற்கரைகளில் அதிக அளவில் சென்னை மக்கள் குவிவார்கள். இதனால் கடற்கரையில் அதிக அளவில் குப்பைகள் தேங்கும். இதனால் சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்ற சிமரப்படுவார்கள். இதை கருத்தில் கொண்டும், கடற்கரை தூய்மையை கருத்தில் கொண்டும், கடற்கரையில் குப்பைகள் சேர்வதை தவிர்க்க.. புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மட்டுமல்லாது குப்பைகளை கொட்டினால் ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
திடக்கழிவுகள் அகற்றம்
இந்நிலையில், பொங்கல் விடுமுறையை ஒட்டி சென்னையில் உள்ள கடற்கரையில் அதிக அளவில் மக்கள் குவிந்தனர். இதனால், குப்பைகள் அதிக அளவில் சேர்ந்தன. தூய்மை பணியாளர்கள் இயந்திரங்களைக் கொண்டு ஜனவரி 14-ஆம் தேதி முதல் தூய்மை பணிகளை மேற்கொண்டு வந்தனர். இன்று வரை மொத்தமாக சென்னை கடற்கரைகளில் 161 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு இருக்கிறது.
மெரினாவில் எவ்வளவு?
ஜனவரி 14-ஆம் தேதி முதல், ஜனவரி 16ஆம் தேதி வரை, 3 நாட்களில் 160.83 மெட்ரிக் டன் மெட்ரிக் கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளன என்று சென்னை மாநகராட்சி தெரிவித்திருக்கிறது. குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் மட்டும், 116.17 மெட்ரிக் டன், பெசன்ட் நகர் கடற்கரையில் 20.97 மெட்ரிக் டன், திருவான்மியூர் கடற்கரையில் 9.2 மெட்ரிக் டன், திருவொற்றியூர் கடற்கரையில் 3.37 மெட்ரிக் டன், பாலவாக்கம் கடற்கரையில் 6.96 மெட்ரிக் டன், நீலாங்கரை கடற்கரையில் 4.37 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டன.
அறிவுறுத்தல்
கடற்கரையில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், உணவு பொருட்களின் எச்சங்கள் உள்ளிட்ட எவ்வித கழிவுகளையும் கொட்டுவது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. எனவே கடற்கரைகளுக்கு வரும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் தங்களது குப்பைகளை, குப்பை தொட்டியில் போட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications