பாஜக தனித்து களமாடி என்ன பலன்.. அதிமுக ஓட்டுக்கள் வேண்டுமானால் ஓபிஎஸ் தேவை: மருது அழகுராஜ்
சென்னை: பாஜக தனித்து போட்டியிட்டு என்ன பிரயோஜனம் இருக்கிறது, அதிமுகவின் வாக்குகள் வேண்டுமானால் ஓபிஎஸ் தேவை என மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு பலமுறை கோர்ட் படியேறி வழக்கு பதிவு செய்த போதிலும் அதிமுக என்பது ஓபிஎஸ்ஸுக்கு எட்டாக்கனியாகிவிட்டது. இதனால் வரும் தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காகவும் அவருக்கு செல்வாக்கே இல்லை என்பதை நிரூபிப்பதற்காகவும் ஓபிஎஸ் அணியும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக இரட்டை இலை சின்னத்தை கேட்க போவதாகவும் ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகிய நிலையில் தான் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பேன் என ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் எப்போதும் பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய அமைச்சர் அமித்ஷாவும் தமிழகம் வந்தால் அவர்களை ஓபிஎஸ் சந்திப்பார்.
ஆனால் இந்த முறை பிரதமர் நரேந்திர மோடி என் மண் என் மக்கள் நிகழ்ச்சிக்காக பல்லடம் வந்த போதும் அவரை ஓபிஎஸ் சந்திக்கவில்லை. அது போல் சூலூர் விமான தளத்திலும் அவரை சந்திக்க ஓபிஎஸ் செல்லவில்லை. சரி இன்றைய தினம் நடக்கும் நெல்லை, தூத்துக்குடி விழாக்களிலாவது ஓபிஎஸ், பிரதமரை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுவும் நடைபெறவில்லை.
பிரதமரை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டு அவர்கள் கொடுக்கவில்லையா, இன்னமும் அதிமுக கூட்டணிக்கு வரும் என பாஜக நம்பிக் கொண்டிருக்கிறதா என நிறைய கேள்விகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் மருது அழகுராஜ் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பா.ஜ.க.வின் வாக்கு வங்கி அண்ணாமலையின் நடைபயணத்தால் மூன்று சதவீதத்தில் இருந்து இரட்டிப்பாகி ஆறு சதவீதமாக உயர்ந்து விட்டதாகவே கற்பனை செய்து கொண்டாலும் அதோடு மோடி பிரதமராக வேண்டும் என்கிற மனநிலை கொண்டவர்களின் ஆதரவால் அது ஏழு சதவீதமே ஆகி விட்டாலும் அந்த ஏழு சதவீதத்தோடு பா.ஜ.க. சேர்த்து வைத்திருக்கும் வாசன், ஜான் பாண்டியன், தேவநாதன் யாதவ், தமிழருவி மணியன் உள்ளிட்ட தனிமனித ஆட்களின் சேர்க்கையால் அது எட்டு சதவீதத்தையே தொட்டு விட்டாலும்.. அதனால் என்ன பிரயோஜனம்?
அண்ணா தி.மு.க.வின் பெரும்பகுதி வாக்குகளை தன் வசப்படுத்த வேண்டுமானால் அதற்கு ஓ.பி.எஸ்.சை முன்வைத்து களமாடினால் மட்டுமே. சுமார் முப்பது சதவீத அ.தி.மு.க. வாக்குகளில் இருந்து சுமார் இருபது சதவீத வாக்குகளையாவது தங்களை நோக்கி தாமரை கட்சியால் ஈர்க்க முடியும் என்பதே கள யதார்த்தம்.
இதனுடன் டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க.வும் அணிசேரும்போது மட்டும் தான் அது குறிப்பிட்ட தொகுதிகளின் வெற்றியை சாத்தியமாக்க முடியும் என்பதே உண்மை. தி.மு.க., தனது கூட்டணியில் காங்கிரஸ், இரண்டு கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் உள்ளிட்ட வாக்கு வங்கியை உறுதிப்படுத்திய கட்சிகளை உள்ளடக்கிக் கொண்டு ஏறத்தாழ ஐம்பது சதவீத வாக்குகளை தன்வசம் கொண்டிருக்கும் நிலையில் மேலும்.. எடப்பாடி அமைக்கும் மூன்றாவது அணி தி.மு.க. வுக்கு கூடுதல் வாய்ப்பை உருவாக்கும்.
இந்த சூழலில் இதனை தடுத்து பல தொகுதிகளின் வெற்றியை பா.ஜ.க. பக்கம் திருப்ப வேண்டுமென்றால் இதுநாள் வரை எடப்பாடிக்கு சகல வகையிலும் உதவி செய்து அவரை ஒற்றைத் தலைமை என்பதாக பிம்பப்படுத்தி பா.ஜ.க. செய்து வந்த தப்பான அரசியலில் இருந்து அக்கட்சி தன்னை முழுமையாக விடுவித்துக் கொண்டு ஓ.பி.எஸ்.சை பிரதானப்படுத்தி அவர் விரும்புகிற தொண்டர்களின் உரிமையை மீட்டுக் கொடுப்பதன் மூலம் மட்டுமே அ.தி.மு.க.வின் பெரும்பகுதி வாக்குகளை பா.ஜ.க. கூட்டணியால் அறுவடை செய்து பயனடைய முடியும் என்பதே நிஜம்.
இதற்கு மாறாக பா.ஜ.க. தன்னை பூதாகர கணக்குப் போட்டுக் கொண்டு கற்பனை கணக்கோடு அரசியல் விற்பனைக்கு முயன்றால் அக் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியத்தையே தேர்தல் முடிவுகள் நிச்சயம் தரும்.
-என்ன நாஞ்சொல்றது
இவ்வாறு மருது அழகுராஜ் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications