இழுபறி முடிவுக்கு வந்தது.. திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.. 2 தொகுதிகள் ஒதுக்கீடு
Recommended Video
சென்னை: லோக்சபா தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுகவுடன் இன்று நடைபெற்ற மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. 2 தொகுதிகளை பெறுகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
ஏற்கனவே இந்த இரு கட்சிகளும் இரு முறை பேச்சுவார்த்தை நடத்தியும், தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்த நிலையில், இன்று தொகுதி உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ளது.
நேற்று அண்ணா அறிவாலயத்தில் இரு கட்சிகள் நடுவே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன்பிறகு நிருபர்களிடம் பேசிய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், எங்கள் கட்சி சார்பில் குறிப்பிட்ட தொகுதிகளை கேட்டோம். பதிலுக்கு திமுக தரப்பில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொகுதிகளை வழங்குவதாக தெரிவித்தனர்.
இதுதொடர்பாக மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்து பேசி விட்டு, மீண்டும் திமுகவிடம் எங்கள் பதிலை தெரிவிப்போம் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், இன்று காலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில், தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அதில் 2 தொகுதிகளுக்கு சம்மதம் என முடிவு எடுக்கப்பட்டது. ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பாக இன்று திமுக பேச்சுவார்த்தை குழுவிடம் தெரிவிக்கப்பட்டது.
களம் இறங்கும் கமல்.. பிரச்சாரத்திற்காக வரும் கெஜ்ரிவால்.. கை கோர்க்கும் நாயகர்கள்!
இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை போலவே இரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 தொகுதிகளை வலியுறுத்தி வந்தது. எனவேதான், தொகுதி உடன்படிக்கையில், காலதாமதம் ஆனது.
ஆனால் திமுக தனது நிலையில் உறுதியாக இருந்தது. இதையடுத்து 2 தொகுதிகளுக்கான கூட்டணி உடன்படிக்கையில், திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும், மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கையெழுத்திட்டனர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய பாலகிருஷ்ணன், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் நடுவே இரு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இரு தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய திமுக முடிவு செய்ததாக அறிவித்தனர்.
இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இன்று காலை இது பற்றி ஆலோசித்து தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் பாஜக கூட்டணியை வீழ்த்த வேண்டிய தேவை இருப்பதால் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு செய்வதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சம்மதித்தது.
அந்த அடிப்படையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலினுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் இரு தொகுதிகளுக்கு உடன்பாடு ஏற்பட்டது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இதோடு சேர்த்து 21 சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றால், திமுகவுக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்துள்ளோம். இது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட விஷயம்தான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.