டேட்டிங்.. தென்னிந்திய பெண்களால் ஃபுல்பாடி மசாஜ்.. வெறும் 1500 மட்டுமே!.. கடிவாளம் போடுமா காவல்துறை
சென்னை: டேட்டிங், பெண்களால் செய்யப்படும் மசாஜ்கள் என செல்போன்களுக்கு தொடர்ந்து மெசேஜ்கள் வருவதால் அதுகுறித்து தமிழக காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
அண்மைக்காலங்களாக பெண்களால் செய்யப்படும் மசாஜ்கள் குறித்து குறுந்தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. வெளியுலகத்திற்கு ஸ்பா, தெரபி சென்டர் என பெயர்களை வைத்து கொண்டு சிலர் உள்ளே ஆண்களின் சபலத்தை பயன்படுத்தி விபச்சாரம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நகரத்திற்கு ஒதுக்குப்புறமான இடங்களில் இது போல் செய்தாலும் போலீஸாரிடம் சிக்கி விடுவதால் இது போன்ற கண்துடைப்பு வேலைகளில் சில கும்பல் இறங்கியுள்ளது.
இது லிஸ்ட்லயே இல்லையே.. டக்கென ரூட்டை மாற்றும் பாஜக.. மொத்தம் 3 பிளான்கள்.. தடதடக்கும் தென்மண்டலம்
பணம் பறிப்பதாக குற்றச்சாட்டு
அவ்வாறு வருவோரிடம் மிரட்டி பணம் பறிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது. மேலும் தங்களை தேடி வரும் ஆண்களின் ஆபாச செய்கைகளை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு ஒரு கும்பல் மிரட்டுவதாக சொல்லப்படுகிறது. மேலும் சிலர் அந்த ஆண்களை மயங்க வைத்து பணம், நகைகள், செல்போன் உள்ளிட்டவற்றை பறித்து செல்வதாகவும் கூறப்படுகிறது.
போலீஸிடம் புகார்
இதுபோல் ஏமாறும் ஆண்களில் வெகு சிலரே போலீஸிடம் புகார் கூறுகிறார்கள். மற்றவர்கள் அவமானம் கருதி அமைதியாக இருந்து விடுகிறார்கள். அந்த வகையில் பம்பர் ஆஃபர், வீக் என்ட் ஆஃபர், மெகா ஆஃபர் என கவர்ச்சி அறிவிப்புகளுடன் சில மெசேஜ்களும் வருகின்றன. அதில் பம்பர் ஆஃபர் 2 மணி நேரத்திற்கு மசாஜ், 3 பெண்கள் செய்வர். வெறும் 1499 மட்டுமே என குறிப்பிட்டு ஒரு போன் நம்பரையும் கொடுத்துள்ளார்கள்.
இறுதி நாட்கள் ஆஃபர்
அது போல் வார இறுதி நாட்களில் ஆஃபர் என கூறி 5 விதமான மசாஜ்கள், 2 மணி நேரம் செய்யப்படும். தென்னிந்தியாவைச் சேர்ந்த 3 பெண்களால் செய்யப்படுகிறது என குறிப்பிட்டு முன்பதிவு செய்யுமாறு ஒரு எண்ணையும் கொடுக்கிறார்கள். அது போல் மெகா ஆஃபர் , முழு உடல் மசாஜ் வெறும் 999 ரூபாய் மட்டுமே. இந்த சலுகையை நழுவவிடாதீர்கள் என்கிறது ஒரு மெசேஜ்.
டேட்டிங் சர்வீசஸ்
அது போல் இன்னொரு மெசேஜில் ஹலோ சார், டேட்டிங் சர்வீசஸுக்கு வரவேற்கிறோம் என கூறி ஒரு செல்போன் நம்பரை கொடுத்து, 100 சதவீதம் ரகசியம் காக்கப்படும் என தெரிவித்துள்ளார்கள். இது போல் ஆண்களை எளிதில் ஏமாற்றும் விதமாக வரும் விளம்பரங்களால் நிறைய பேர் இதை நம்பி அந்த கும்பலிடம் பணம், நகைகளை பறிகொடுத்திருக்கக் கூடும்.
இதுவும் சட்டவிரோதம்
மேலும் தமிழகத்தில் விபச்சாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவரது இச்சையை தூண்டும்விதத்தில் செய்யப்படும் மசாஜ்களும் சட்டபடி குற்றமாகவே கருதப்படுகிறது. எனவே இதுகுறித்து தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகளை வலுக்கின்றன.
ஆபாசமாக பேசுதல்
சமூகவலைதளங்களில் ஆபாசமாக பேசுவது குற்றம் என்றால் இது போல் ஆண்களின் சபலத்தை தூண்டும்விதமாக மெசேஜ்களை அனுப்புவது குற்றம்தான். இது ஒரு நெட்வொர்க்காக இயங்கி வருகிறது என்பது தெரிகிறது. இது பொதுமக்களுக்கு தேவையற்ற மனஉளைச்சலை கொடுக்கிறது.
வேலையில்லாமல் வாழ்வாதாரம்
கொரோனா கால கட்டத்தில் நிறைய பேர் வேலையில்லாமலும் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ள நிலையில் இது போன்ற இடங்களுக்கு சென்று இருப்பதும் பறிக்கப்பட்டால் குடும்பம் நடத்துவது எப்படி என்ற கேள்வி எழுகிறது. ஆன்லைன் வகுப்புகள் நடந்து வரும் நிலையில் அனைத்து மாணவர்களும் செல்போனும் கையுமாகவே இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக 6 ஆம் வகுப்பிற்கு மேலுள்ள மாணவர்களுக்கு நீண்ட நேரம் வகுப்புகள் செல்கின்றன.
மசாஜ் மெசேஜ்கள்
இது போன்று இரண்டும் கெட்ட வயதில் இருக்கும் மாணவர்கள் யாரேனும் இது போன்ற மெசேஜ்களை பார்க்கக் கூடும். இதனால் இளைய சமுதாயமும் சீர்கெடும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. இவர்களை காப்பதும் நமது கடமையாகும். மாணவர்களும் இது போன்ற மெசேஜ்களை படிக்கவோ போன் செய்வதோ செய்யாமல் படிப்பிலும் தங்கள் லட்சியத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆபாசம் பேசுதல்
யூடியூப் மூலம் சில பெண்கள் ஆபாசமாக பேசுவதாகவும் அரைகுறை ஆடை அணிந்து கொண்டு டான்ஸ் ஆடுவதாகவும் ஏகப்பட்ட புகார்கள் தமிழக காவல்துறைக்கு சென்றுள்ளது. இந்த யூடியூப் வீடியோக்களும் மாணவர்களுக்கு நோட்டிபிகேஷன் வருவதால் அதை பார்க்கும் மாணவர்கள் மனம் அலைபாயும். நாடகத்தில், சினிமாவில், கதை புத்தகத்தில், அட்டை படத்தில் என தாராளமாக கவர்ச்சி காட்டப்பட்டு வருகிறது. இதனால் சமூகம் ஏற்கெனவே பகுதி அளவு கெட்டுவிட்டதாக ஒரு குற்றச்சாட்டு எழுகிறது. மேலும் இது போன்ற கவர்ச்சிகளை பார்க்கும் சிறுவர்களில் சிலர் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் விழுகிறார்கள். மேலும் பணத் தேவைக்காக திருட்டு, கொள்ளை வழக்குகளிலும் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குடும்பமே சீரழியும் நிலை ஏற்படுகிறது. நெருப்பு என்றால் சுடும் என தெரியாமல் தொட்டு சுட்டு வாங்கித் தெரிந்து கொள்ளும் வயதுதான் இந்த டீன் ஏஜ் ஆகும். எனவே இளைய சமூகம் நல்வழி பாதையில் பயணிக்க இது போன்ற பிரச்சினைகளுக்கு விரைவில் ஒரு தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக இருக்கிறது. அது போல் யூடியூப்பில் பெண்கள் பேசும் ஆபாச பேச்சுகள் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.