முதல் பிரசாரத்திலேயே விஜய்க்கு வந்த சிக்கல்! கூட்டத்தில் புகுந்த வண்டியில் யார்? திருச்சியில் பரபர!
சென்னை: திருச்சியில் பிரச்சார கூட்டத்திற்கு வந்திருந்த தவெக தலைவர் விஜய், தற்போது தான் 15 நிமிடங்களில் கடக்க வேண்டிய தூரத்தை மூன்றரை மணி நேரமாகியும் அவரால் கடக்க முடியாத அளவிற்கு கட்டுக்கடங்காத கூட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் புகுந்த ஆம்புலன்ஸ் வெளியேற முடியாமல் சிக்கி தவித்ததால் பரபரப்பும் ஏற்பட்டது.
ஆம்புலன்ஸில் நோயாளியின் குடும்பத்தினரின் பரிதவிப்பை விஜய் உணர்ந்திருப்பாரா என்பதுதான் கேள்வியாக உள்ளது. விஜய் அத்தனை கட்டுப்பாடுகளை விதித்தும் தொண்டர்கள் இப்படி பொதுமக்களுக்கு இடையூறு செய்வது எப்போது மாற போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தவெக தலைவர் விஜய் திருச்சியில் தொடங்கி தமிழகம் முழுவதும் தனது சுற்றுப்பயணத்தை செய்கிறார். இதற்காக பிரத்யேக பஸ் தயார் செய்யப்பட்டு அதில் அவர் திருச்சியில் பிரச்சாரம் செய்யவுள்ள மரக்கடைக்கு வந்துக் கொண்டிருக்கிறார்.
15 நிமிடங்கள்
திருச்சி விமான நிலையத்திற்கு தனி விமானத்தில் வந்த அவர், மரக்கடையை அடைய 15 நிமிடங்கள்தான் ஆகும். ஆனால் விமான நிலையம் முதலே தொண்டர்கள் அலை அலையாக திரண்டு வருவதால் அந்த வாகனம் தற்போது 3 மணி நேரத்தை கடந்து இன்னும் அடைய வேண்டிய இடத்தை அடையாமல் உள்ளது.
வழிநெடுகிலும் கூட்டம்
வழிநெடுகிலும் கூட்டம் இருக்கும் போதிலும் அவர் பேசவிருக்கும் மரக்கடை அருகேயும் மக்கள் காத்திருக்கிறார்கள். ஏற்கெனவே நேரம் முடிந்துவிட்ட நிலையில் தற்போது அவரால் பேச முடியுமா என்ற சந்தேகமும் எழுகிறது.
ஆம்புலன்ஸ் சிக்கியது
விஜய் வந்து கொண்டிருந்த போது அந்த கூட்டத்தில் ஒரு ஆம்புலன்ஸ் வாகனமும் சிக்கித் தவித்தது. அந்த ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு போலீஸாரும் தவெக தொண்டர்களும் வழி ஏற்படுத்தி கொடுத்து அனுப்பி வைத்தனர். இது குறித்து மூத்த பத்திரிகையாளர் ரகு, புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: விஜய்க்கு இத்தனை மாஸ் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. இதை யாரும் மறுக்கவும் முடியாது.
சலசலப்பு
என்னதான் திமுக இந்த சலசலப்புகளுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம் என சொன்னாலும் ஏற்கெனவே சினிமா துறையில் இருந்து வந்த எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவிற்கும் சேர்ந்த கூட்டம் எப்படி வாக்குகளானது என்பதை அவர்கள் அறியாமல் இல்லை. மாநாடு என்றால் ஊருக்கு ஒதுக்குப்புறமாக வைத்திருக்கலாம். ஆனால் இது ஒரு பொதுக் கூட்டம், எனவே பொதுமக்கள் கூடும் இடங்களில்தான் வைக்க வேண்டும். எனவே மரக்கடை என்பது பெரிய பாயிண்ட்.
பிரச்சார வாகனம்
இவருடைய பிரச்சார வாகனம் தவழ்ந்து வருவதால் அந்த வழியில் ராமநாதபுரம், மதுரை செல்லும் பேருந்துகள் ஸ்தம்பித்து நிற்கின்றன. பல்வேறு முக்கிய நிகழ்வுகளுக்காக திருச்சி நெடுஞ்சாலையை பயன்படுத்தும் மக்களும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
அவசர காரியம்
விஜய் வாகனம் வரும் வழியில் அந்த பகுதியைச் சேர்ந்த நிறைய பேர் அவசர தேவைக்கும், ஏர்போர்ட்டுக்கும், மருத்துவமனைக்கும் செல்ல வேண்டியவர்கள் இருப்பர். ஆனால் அவர்களை பற்றியெல்லாம் கவலைப்படாமல் இத்தகைய கூட்டத்தை கூட்டியதே தவறு.
விஜய்யை மதிக்காத தொண்டர்கள்
விஜய் நேற்றைய தினம் அத்தனை அறிவுரை கூறியும் அவரது கட்சியினரே பின்பற்றவில்லை என்றால் என்ன அர்த்தம்? கூட்டத்தில் வந்த ஆம்புலன்ஸ் வழியின்றி தவித்தது. என்னதான தங்கள் கட்சிக்கு மாஸ் கூட்டம் என டிரோன் காட்சிகளை சமூகவலைதள பக்கங்களில் போட்டு சிலாகித்துக் கொண்டாலும் அந்த நொடி ஆம்புலன்ஸில் நோயாளியுடன் வரும் உறவினரின் மனம் என்ன பாடுபட்டிருக்கும்.
அரியலூருக்கு படையெடுப்பா
எனக்கென்னவோ இந்த கூட்டம் அப்படியே அரியலூருக்கும் சென்றுவிடுமோ என்ற அச்சம் உள்ளது. இதெல்லாம் ஓவர்! இதனால் பொதுமக்களுக்கு கஷ்டம் இருப்பதுடன் காவல் துறையினர் இதை தவிர்த்து வேறு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட முடியாத நிலை உள்ளது.
ரெஸ்ட் கிடைக்காதே
மேலும் விஜய் இப்படியே உட்கார்ந்து கொண்டு ஊர்ந்து வந்தால் அடுத்து அரியலூர், பெரம்பலூருக்காவது நேரத்திற்கு சென்றடைய முடியுமா? அவருக்கு ஓய்வில்லாமல் பயணிக்கும் நிலை ஏற்படுமே!
மக்களுக்கு சலிப்பு
விஜய்யின் இந்த கூட்டத்தை பார்த்து தமிழகம் முழுவதும் இருக்கும் மக்கள் அய்யோ அடுத்த வாரம் நம்ம மாவட்டம்தானா? என அச்சம் கொள்ளும் அளவுக்கா நடந்து கொள்வது? இதனால் கட்சியினருக்கு சந்தோஷம் இருந்தாலும் பொதுமக்களுக்கு சலிப்பும் வெறுப்பும்தான் ஏற்படும்.
அசம்பாவிதம்
அந்த கூட்டத்திலேயே யாருக்காவது அசம்பாவிதம் ஏற்பட்டாலும் அவரை மீட்பதற்குகூட வழியில்லாத நிலை உள்ளது. இனி அரியலூருக்கும் மற்ற ஊர்களுக்கும் செல்லும் விஜய், போலீஸுடன் உட்கார்ந்து பேசி என்ன செய்யலாம் என்பதை கேட்கவேண்டும்.
காவல் துறை
காவல் துறை என்பது திமுக அரசின் அமைப்பு என இல்லாமல் அது ஒரு தனி அமைப்பு என்பதை புரிந்து கொண்டு விஜய் பேசினால், இது போன்ற பிரச்சினைகள் எழாது. இவ்வாறு அவர் கூறியிருந்தார். அது போல் எந்த கட்சிக்கும் இல்லாத அளவுக்கு தங்கள் கட்சிக்கு போலீஸார் கட்டுப்பாடுகளை விதித்திருந்ததற்கு விஜய் நேற்று விமர்சித்திருந்தார்.
கட்டுப்பாடு விதித்தும்
போலீஸ் கட்டுப்பாடு விதித்தும் விஜய் தனது தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியும் இத்தனை இடையூறுகளை கொடுக்கிறார்களே, போலீஸார் கட்டுப்பாடு விதிக்காமல் விட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. இந்த கூட்டத்தில் தண்ணீர் கிடைக்காது, காற்று கிடைக்காது, செல்போன் சிக்னலும் கிடைக்காது. இதை தொண்டர்களும் உணராமல் ரிஸ்க் எடுக்கிறார்கள். இனி அடுத்தடுத்த கூட்டத்திற்கு அனுமதி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications