முதல்வர் ஸ்டாலின் பதவி விலக கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
சென்னை: முதல்வர் ஸ்டாலினை பதவி விலக வலியுறுத்தி வரும் 29ம் தேதி அன்று தமிழகம் முழுவதும் மாபெரும் கண்ட ஆர்ப்பாட்டம் அதிமுக சார்பில் நடைபெறும் என்று எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இரண்டாண்டு திமுக ஆட்சியில், கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் இறப்பு; கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப்பொருள்கள் புழக்கம் உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் அதிகரித்திருப்பதாகவும். ஊழல முறைகேடுகள் அதிகரித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டிருந்தார். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கோரி திங்கள்கிழமை காலை ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்துப் புகார் மனுவும் அளித்திருந்தார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டாண்டு இருண்ட திமுக ஆட்சியில், தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள்; கள்ளச் சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் இறப்பு; கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப் பொருட்கள் புழக்கம் உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்தத் தவறிய விடியா திமுக அரசைக் கண்டித்தும்; இவைகளுக்கு முழு பொறுப்பேற்று முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், வருகின்ற 29.05.2023 - திங்கட் கிழமை காலை 10 மணியளவில், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களில், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் முன்பும், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் இல்லாத மாவட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு அல்லது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
மக்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள். கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; கழகம் மற்றும் சார்பு அமைப்புகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும்; உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும்; கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு ஆதரவு நல்கிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications