"தூண்டிலை" வடக்கே வீசிய ஸ்டாலின்.. கலக்கத்தில் பாஜக.. அடுத்தடுத்த அப்செட்டில் கதர்கள்.. அப்ப கூட்டணி?
எடப்பாடி பழனிசாமி காங்கிரசுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருக்குமா என யூகம் எழுகிறது
சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தொடருமா? அல்லது விலகுமா? என்ற அளவுக்கு குழப்பங்களும், விவாதங்களும் எழ ஆரம்பித்துள்ளன.
இந்த ஒரு வாரத்தில் 2 முக்கிய நீதிமன்ற வழக்குகளின் தீர்ப்புகள் வெளிவந்தன.. இந்த தீர்ப்புகள், அரசியல் கட்சிகளில் சலசலப்பையும், அதிர்வையும் உண்டுபண்ணி உள்ளது.
பொருளாதார அடிப்படையிலான 10 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது.. அதேசமயம், கூட்டணி உள்ள காங்கிரஸ் வெளிப்படையாக ஆதரித்து வருகிறது..

விதை
இந்த இடஒதுக்கீட்டு விஷயத்தில் இரு கட்சிகளிடமும் முரண்பாடு வெடித்துள்ளது.. இது தங்களுக்கு கிடைத்த வெற்றி, இதற்கு விதை போட்டதே நாங்கள்தான் என்கிறது காங்கிரஸ். தமிழக காங்கிரஸ் இதை எதிர்த்தாலும், தேசிய அளவில் நிலைப்பாடுகள் மாறி நிற்கின்றன.. இந்த நிலைப்பாடுகள் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுவதையும் மறுக்க முடியாது.. அதேசமயம், சுப்ரீம்கோர்ட்டில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 6 பேரையும் விடுதலை செய்துள்ளதற்கு திமுக வரவேற்பு தெரிவித்துள்ளது... ஆனால், காங்கிரஸ் கட்சி கடுமையாக கொந்தளித்துள்ளது..

பேரறிவாளன்
இடஒதுக்கீட்டை வரவேற்ற ஜெய்ராம் ரமேஷ், 6 பேர் விடுதலையை எதிர்த்துள்ளார்.. அதாவது, ஆளுநருக்கு எதிராக அணுகும் விஷயமாக இதை பார்ப்பதாக திமுக அணுகுகிறது.. பேரறிவாளனை விடுவித்தபோதும், இதே மனநிலைமைதான், திமுக - காங்கிரஸ் இடையே தென்பட்டது.. அப்போது பேரறிவாளனை கட்டிப்பிடித்து, ஆரத்தழுவி முதல்வர் வரவேற்றதன் கொந்தளிப்பு, தமிழக காங்கிரஸ் இடையே அடங்க பல நாட்கள் ஆனது.. அதுமட்டுமல்ல, ராஜீவ் நினைவு தினத்தின்போது, அதாவது மே 21ம் தேதி கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியை திமுக தரப்பு எடுக்கவில்லையே என்ற வருத்தமும் காங்கிரசுக்கு இருந்து வரத்தான் செய்கிறது..

பானிபூரி
மேலும், அமைச்சர் பொன்முடி பேசிய பேச்சும், காங்கிரசுக்கு கடுப்பை உண்டுபண்ணியிருந்தது.. "இந்தி மொழி படித்தால் வேலை கிடைக்கும் என்கிறார்கள்... ஆனால் தமிழகத்தில் இந்தி படித்தவர்கள்தான் பானிபூரி விற்கிறார்கள்... யாரும் யார் மீதும் மொழியை திணிக்க கூடாது என்று பேசியிருந்தார்.. இப்படி இந்திக்கு எதிரான பேச்சினால் காங்கிரஸ் தரப்பு அதிருப்திக்குள்ளானதாக கூறப்பட்டது.. காரணம், வடமாநிலங்களில் காங்கிரஸின் கோட்டைகளை ஆம்ஆத்மி, பாஜகவிடம் இழந்து வரும் நிலையில், இந்தி எதிர்ப்பு பேச்சுக்கள் தங்களை மேலும் பலவீனப்படுத்தி விடுகிறதே என்ற கலக்கம் கதர்களை சூழ்ந்தது.

டெல்லி போன்
இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் திமுகவுடன், அதிருப்தியில் காங்கிரஸ் அடுத்தடுத்து காணப்படுவதால், இது கூட்டணியை பாதிக்குமா? என்ற ரீதியில் பொருத்தி பார்க்கப்பட்டு வருகிறது.. அதுமட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமி முன்பு ஒருமுறை ராகுல் காந்திக்கு போன் செய்து பேசியதன் சலசலப்பு தற்போது மீண்டும் கிளறிவிடப்பட்டுள்ளது.. ஒருவேளை அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துக் கொள்ள வாய்ப்பு இருக்குமோ? என்ற டவுட்டும் வலம்வருகிறது. ஆனால், காங்கிரஸை பொறுத்தவரை, திமுக கூட்டணியை எளிதாக முறித்து கொள்ள முடியாது என்பதே நிதர்சனமாக இருக்க முடியும்.

ஹேப்பி வாழ்த்து
காரணம், பலம்பொருந்திய பாஜகவை எதிர்க்க, திமுக போன்ற கட்சியின் தயவு தேவை என்பதை அக்கட்சி நன்கு உணர்ந்துள்ளது.. அதுபோல, காங்கிரஸை அவ்வளவு சீக்கிரம் திமுக கூட்டணியில் இருந்து கழட்டியும் விடாது என்கிறார்கள்.. பாஜகவுக்கு எதிரான கூட்டணியை அமைப்பதில், காங்கிரஸின் பங்கும் அவசியம்.. அதனால்தான், ராகுல்காந்தி பாதயாத்திரை நேரில் வாழ்த்து என்பன போன்ற நடவடிக்கைகளில் ஸ்டாலின் நேடியாகவே ஸ்பாட்டுக்கு வந்து வாழ்த்து சொல்லிவிட்டு போனார்... ஆக, ஒருபக்கம் தேசிய அரசியலில் பாஜகவுக்கு எதிரான களத்தை அமைத்துக் கொண்டே மறுபுறம், தமிழகத்தில் வலுவான கூட்டணியையும் ஸ்டாலின் கட்டமைக்க வேண்டி உள்ளது.

தூண்டில் பாஜக
இன்னொன்றையும் அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.. திமுக தனித்து போட்டியிட்டால், இஸ்லாமிய மற்றும் சிறுபான்மையினர் ஓட்டுக்களை பெறுவதிலும் சிக்கல் உள்ளது.. ஏற்கனவே, எடப்பாடி தரப்பு காங்கிரஸை மூவ் செய்து வருவதாக தகவல்கள் வரும் சூழலில், திமுக இங்கு விழிப்பாக இருக்க வேண்டும்.. அனைத்து தரப்பினரின் ஆதரவுடன் திமுக தொடர்ந்து வெற்றி பெற வேண்டுமானால், அது காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் இணைந்து சென்றால் மட்டுமே சாத்தியம் என்பதையும் அழுத்தமாக பதிவு செய்கிறார்கள்.... என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications