3 நாட்களுக்கு ஜில் மழை இருக்கு..சென்னைவாசிகளே..சுள்ளென்று வெயிலடிக்குமாம் உஷார்!
தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு மழை இருந்தாலும் சென்னையில் வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று நாளை மற்றும் மார்ச் 4 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியல் மற்றும் குறைந்தபட்ச வெப்ப நிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது.
நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை, வடகிழக்கு பருவமழை முடிந்து குளிர்காலமும் முடியப்போகிறது. கோடை காலத்தின் ஆரம்ப கட்டத்திலேயே வெப்பம் தகிக்கிறது. பலராலும் வெயிலின் கொடுமையை தாங்க முடியவில்லை.

நாடு முழுவதும் வெப்ப அலை வீசக்கூடும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. வெப்பத்தால் ஏற்படும் தாக்கங்கள், வெப்ப அலையால் ஏற்படும் நோய்களை எதிர்கொள்ள ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில், வழக்கத்திற்கு மாறாக வெப்பநிலை உயர்ந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
சுகாதார மையங்களில் குளிர்சாதனங்கள் முறையாக செயல்பட தங்கு தடையற்ற மின்விநியோகம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள், ஐஸ் பேக் இருப்பதை உறுதி செய்ய மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெப்பம் தொடர்பான நோய்களை கண்காணிக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஒரு பக்கம் வெயில் சுட்டெரித்தாலும், மதுரை, கும்பகோணம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. சாரல் மழையும் பெய்வதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதனிடையே வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 2 மற்றும் 3 ஆகிய நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவும் என வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியல் மற்றும் குறைந்தபட்ச வெப்ப நிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் வறண்ட வானிலை பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் வலிநோக்கம் பகுதியில் 2 செ.மீ. மழையும், ராமநாதபுரம், மந்தம் பகுதிகளில் தலா 1செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 36.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications