சென்னையில் மே 17 பேரணி தடுத்து நிறுத்தம்.. ஈழத்தமிழர்களுக்காக நினைவேந்தல் நடத்த சென்றவர்கள் கைது
சென்னை: இலங்கையின் ஈழத் தமிழர் இனப்படுகொலைக்கான 13 ஆம் ஆண்டு நினைவேந்தலுக்காக சென்னை பெசண்ட் நகர் கடற்கரை நோக்கி பேரணியாக சென்ற மே 17 இயக்கத்தினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இலங்கை முள்ளிவாய்க்காலில் அந்நாட்டு ராணுவத்தினரால் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களுக்காக ஆண்டுதோறும் மே 17 இயக்கம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தது.
பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று கூடி ஆண்டுதோறும் நடத்தி வந்த நினைவேந்தல் நிகழ்வு 2017 ஆம் ஆண்டு தடுக்கப்பட்டது. தொடர்ந்து வழக்குகள் பதியப்பட்டு 17 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். நான்கு பேர் குண்டர்சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.
இலங்கை: இன்று கொழும்பு சென்றடைகிறது தமிழ்நாடு அரசின் நிவாரணப் பொருட்களுடனான கப்பல் டான் பின்-99!
இடம் ஒதுக்கிய காவல்துறை
தொடர்ச்சியாக 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளிலும் தடையை மீறி நினைவேந்தல் சென்றபோது மே 17 இயக்கத்தினர் தடுத்து நிறுத்தப்பட்டு வழக்குகள் பதியப்பட்டன. இந்நிலையில் கடந்த மே 2-ம் தேதி தமிழ்நாடு காவல்துறையினரிடம் சென்னை மெரினா, பட்டினப்பாக்கம் ஆகிய இடங்களில் நினைவேந்தல் கூட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது. இது தொடர்பாக பல கட்ட ஆலோசனை நடத்திய காவல்துறை கடந்த வாரம் நினைவேந்தல் கூட்டம் நடத்த பெசன்ட் நகர் கடற்கரையை தேர்ந்தெடுத்து ஒதுக்கிக் கொடுத்தது.
கடைசி நேரத்தில் அனுமதி மறுப்பு
இதில் அனைத்துக் கட்சி தலைவர்கள், ஆளுமைகள் பங்கேற்பதாக மே 17 இயக்கம் அறிவித்து விளம்பரம் செய்தது. இந்த நிலையில், நேற்று நினைவேந்தல் கூட்டத்துக்கு அனுமதி கொடுப்பது இயலாது என அறிவித்த காவல்துறை, இதற்கான அனுமதி மறுப்பு கடிதத்தையும் அளித்திருக்கிறது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இறந்தவர்களுக்கு நினைவேந்துவது அடிப்படை உரிமை. இதை எந்த சட்டத்தின் மூலமாகவும் தடுக்க இயலாது.
மே 17 இயக்கம் கண்டனம்
இந்நிலையில் இப்பண்பாட்டு நிகழ்வை நடப்பதற்கு அனுமதி மறுப்பது சனநாயக விரோதம் மட்டுமல்ல, தமிழின விரோத அடக்குமுறையாகும்.
மெரினா கடற்கரையில் மட்டுமல்லாமல் அனைத்து நீர் நிலைகளில் தமிழர்கள் இறந்தோருக்கு நினைவேந்துவது இன்றளவும் நடக்கும் நிலையில் எவ்வித அடிப்படையுமின்றி இந்நிகழ்வினை தடுப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
அதிமுக அரசின் நிலையில் திமுக
திமுக அரசு இதற்கு முந்தைய அதிமுக அரசின் நிலையையே தொடர்வது சனநாயகவிரோதமாகும். ஒன்றிய அரசின் உள்துறை, ஒன்றிய உளவுத்துறையின் அழுத்தத்தின் காரணமாகவும் நிகழ்வு தடை செய்யப்பட்டதாகவும் எமக்கு சொல்லப்பட்டது. எக்காரணமாயினும், தமிழீழ இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்விற்கான உரிமையை தமிழக திமுக அரசு உறுதி செய்யாதது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழீழ இனப்படுகொலை மற்றும் அதற்கான நினைவேந்தல் நடத்துவது தொடர்பாக திமுக அரசு தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
தடையை மீற் நினைவேந்தல்
அடக்குமுறையை மீறி தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வை மே பதினேழு இயக்கம் முன்னெடுக்கும். எந்நிலையிலும் நாங்கள் பின்வாங்க மாட்டோம் என உறுதிபட தெரிவிக்கிறோம். அடக்குமுறையை சனநாயக ரீதியில் எதிர்கொண்டு அம்பலப்படுத்த அனைத்து சனநாயக ஆற்றல்களையும் அழைக்கிறோம். பெசன்ட் நகர் பேருந்து நிலையம் முன்பு மாலை 4 மணிக்கு அனைவரும் ஒன்றுகூடி, கடற்கரையை நோக்கி நினைவேந்த செல்வோம்." என தெரிவித்தது.
ஏராளமானோர் கைது
இதனை தொடர்ந்து இன்று மாலை சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்கு மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் வன்னியரசு, ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர் வசீகரன், பெரியாரிய அமைப்பினர், தமிழீழ செயற்பாட்டாளர்கள், இடதுசாரிகள் பலர் பேரணியாக சென்றனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.