தமிழ்நாட்டில் வரும் பிப்.14 முதல் எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்!
சென்னை: தமிழ்நாட்டில் வரும் பிப்.14 முதல் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 27ஆம் தேதி எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்குக் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் தமிழக அரசின் 7.5% உள் ஒதுக்கீடு காரணமாக மொத்தம் 544 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ இடங்களைப் பெற்றனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் வரும் திங்கள்கிமை (பிப்.14) முதல் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வகுப்புகள் நடைபெறும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும், 7.5% இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புகளில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்றும் அவர்கள் எவ்வித கல்வி உதவித்தொகைக்கும் விண்ணப்பிக்கக் கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
மேலும், தேர்வு காலங்களில் ஆள்மாறாட்டத்தைத் தவிர்க்கும் வகையில் வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் மாணவர்களின் கைரேகைகளைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நடைபெற்ற கலந்தாய்வில் 5,076 மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேர்ந்துள்ளனர்.