துரை வைகோ விலகல் அறிவிப்பை டிவியில் பார்த்து அப்படியே 'ஷாக்'ஆகிட்டேன்.. சொல்வது 'அப்பா' வைகோ!
சென்னை: மதிமுகவின் முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக மகன் துரை வைகோ அறிவித்ததை தொலைக்காட்சிகளில் பார்த்துதான் தாம் தெரிந்து கொண்டதாகவும் துரை வைகோவின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியளிப்பதாகவும் மதிமுகவின் பொதுச்செயலாளரான வைகோ தெரிவித்துள்ளார்.
வைகோவின் வலது கரம், மல்லை சத்யாவை மதிமுகவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பது துரை வைகோவின் எண்ணம். இதற்காக மல்லை சத்யாவின் மதிமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியை பறிக்க வேண்டும் என நெருக்கடி கொடுத்தார் துரை வைகோ.

ஆனாலும் மல்லை சத்யா தமது வலது கரம், உயிரைக் காப்பாற்றியவர்; அவரை விட்டுத்தர முடியாது என்பது வைகோவின் நிலைப்பாடு. இன்னொரு பக்கம், துரை வைகோ, முழுமையாக மதிமுகவை ஜாதிய கட்சியாகவே மாற்றிவிட்டதாகவும் குற்றச்சாட்டுகள்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் மதிமுகவின் நிர்வாகக் குழு கூட்டம் நாளை சென்னையில் நடைபெறும் என வைகோ அறிவித்திருந்தார். அதேநேரத்தில் மல்லை சத்யாவை மதிமுகவின் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என துரை வைகோ ஆதரவாளர்கள், பல மாவட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றினர். இதற்கு வைகோ எதிர்ப்பு தெரிவித்தார்.
அத்துடன் துரை வைகோ, கட்சிப் பதவிகளில் இருந்து விலகுவார் என தகவல்களும் வெளியாகின. சமூக வலைதளங்களில் மதிமுகவினரும் இதனை பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் துரை வைகோ, இன்று மதிமுக முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது தொடர்பாக நீண்ட அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். அதில் மல்லை சத்யாவின் பெயரை குறிப்பிடாமல் ஒருவர் கட்சியை சிதைத்து வருவதாக குற்றம்சாட்டி இருந்தார் துரை வைகோ.
துரை வைகோவின் இந்த முடிவு தொடர்பாக வைகோவிடம் ஊடகங்கள் கருத்து கேட்ட போது, மதிமுக முதன்மை செயலாளர் பதவியில் இருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்தது எனக்கு தெரியாது; டிவியில்தான் பார்த்து தெரிந்து கொண்டேன் என கூறியுள்ளார். மேலும் துரை வைகோவின் இந்த முடிவு தமக்கு பெரும் அதிர்ச்சியைத் தருகிறது என்றும் வைகோ எம்பி தெரிவித்துள்ளார். மகன் துரை வைகோவின் முடிவு தந்தை வைகோவுக்கு தெரியாது என்பது மதிமுகவினரை மேலும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications