“உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது அவமானம்.. சமூக நீதிக்கு எதிரானது” - உடைத்து பேசிய துரை வைகோ
சென்னை: திமுக கூட்டணியில் அங்கம் வகித்து தேர்தலை எதிர்கொண்ட கட்சிகள், தற்போது தவெக கூட்டணிக்கு வந்திருக்கின்றன. இதில் மதிமுக மட்டும்தான் மிஸ்ஸிங். எனவே திமுக மீது மதிமுக தொடர் விமர்சனங்களை அடுக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் திமுக தரப்பை டென்ஷன் ஆக்கியிருக்கிறது.
ஆங்கில செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த துரை வைகோ, "திமுக கூட்டணியில் இருந்த கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளுமே தொகுதிப் பங்கீடு குறித்து அதிருப்தியில் இருந்தன. ஆனால், கூட்டணி ஒற்றுமை கருதி நாங்கள் அதனை ஏற்றுக்கொண்டோம். எங்களைப் பொறுத்தவரை சின்னம் தான் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது அவமானம்.

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது அவமானம்
ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி தனது சொந்தச் சின்னத்தில் போட்டியிடவில்லை என்றால், அது தனது அடையாளத்தையே இழந்துவிடும் அபாயம் உள்ளது.
முதலில் ஒரு தொகுதியில் மட்டும் தனிச் சின்னத்தில் போட்டியிட அனுமதிப்பதாகக் கூறி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், பின்னர் நான்கு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று எங்களை வற்புறுத்தினார்கள். இது எங்கள் தொண்டர்களைக் காயப்படுத்தியதுடன், கட்சியின் இருப்பு குறித்தே அவர்களைக் கேள்வி கேட்க வைத்தது. இது எங்களுக்கு மிகுந்த மனவேதனையையும், அவமானத்தையும் அளிக்கிறது.
மதிமுகவின் அரசியல்
வேறொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடும்போது, வேட்பாளர் தனது தாய் கட்சியிலிருந்து விலகி, அந்தச் சின்னத்திற்குரிய கட்சியில் உறுப்பினராக இணைய வேண்டும். சட்டப்படி, உதயசூரியன் சின்னத்தில் வென்றவர்கள் திமுக எம்.எல்.ஏ-க்களாகவே கருதப்படுவார்கள். இது வெறும் சின்னம் சார்ந்த பிரச்சனை அல்ல; மதிமுகவின் அரசியல் அடையாளத்தையே சிதைக்கும் செயல்.
நான் வருந்துகிறேன்
திமுக கூட்டணியில் போட்டியிட்டதற்காக நான் வருத்தப்படவில்லை, ஆனால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடச் சம்மதித்ததற்காக வருந்துகிறேன். ஜூன் 27-ம் தேதி நடைபெறவுள்ள மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.
திராவிட சித்தாந்தம் முக்கியம் என்றாலும், இன்றைய இளைஞர்கள் கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு போன்ற வளர்ச்சி சார்ந்த விஷயங்களையே எதிர்பார்க்கிறார்கள். அதற்கு ஏற்ப மதிமுக தன்னை மறுசீரமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்" என்று கூறியிருந்தார்.
இளைஞர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்
அதேபோல தமிழக வெற்றிக் கழகம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "மக்கள், குறிப்பாக இளைஞர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி தனித்துவமானது. இது பிரிவினைவாத அரசியலுக்கும், பணபலத்திற்கும் எதிராகக் கிடைத்துள்ள வெற்றி.
தமிழக அரசியலில் நீண்டகாலமாக இருந்த சில சூத்திரங்களை இந்த வெற்றி உடைத்துள்ளது. இந்த அரசின் செயல்பாடுகளை மதிப்பிட இன்னும் ஆறு மாத காலமாவது அவகாசம் தேவை. நிதி நெருக்கடி, அனுபவமில்லாத அமைச்சரவை எனப் பல சவால்கள் அவர்களுக்கு உள்ளன." என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications