தொலைபேசியில் வந்த துயரச் செய்தி! 30 ஆண்டுகால டிரைவர் மறைவு! நேற்றிரவு தூக்கத்தை தொலைத்த வைகோ!
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் ஓட்டுநராக 30 ஆண்டுகாலம் பணியாற்றி வந்த சின்னதுரை, நேற்றிரவு மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
வைகோ அம்பாசிடர் கார் வைத்திருந்த காலம் தொட்டு காண்டெஸா, டாடா சுமோ, மிட்சுமிஷி பஜேரோ, டொயோட்டா பார்ச்சூனர், என எல்லா வகை கார்களுக்கும் கடைசி வரை ஓட்டுநராக இருந்தவர் சின்னத்துரை. அதுமட்டுமல்ல பிரச்சார சுற்றுப்பயணம் உள்ளிட்ட கட்சி நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது சின்னத்துரையை தான் டெம்போ டிராவலர் வேனை இயக்கச் சொல்வார் வைகோ.

ஏனெனில் வைகோவின் கண் அசைவுக்கேற்ப வாகனத்தை இயக்கக்கூடியவர் துரை. எந்த இடத்தில் நிற்க வேண்டும், எந்த இடத்தில் மெதுவாக செல்ல வேண்டும், என்பன உள்ளிட்ட அத்தனை விவரங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார் வைகோ ஓட்டுநர் துரை. அதேபோல் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் அத்துப்படியாக தெரிந்து வைத்திருக்கும் ஆற்றலையும் பெற்றிருந்தார் வைகோவின் ஓட்டுநர் சின்னதுரை.
10 வருடத்திற்கு முன்பு சென்ற ஒரு இடத்திற்கு இப்போது செல்ல நேர்ந்தாலும் சரியாக போய் அந்த இடத்தில் நிற்பார் வைகோ டிரைவர். யாரும் பாதை சொல்ல வேண்டியதில்லை. வைகோவிடம் ஒரு பழக்கம் உண்டு, அதாவது அவர் எங்கு சுற்றுப்பயணம் முடித்து உணவருந்த சென்றாலும் தமது ஓட்டுனர் சின்னதுரை சாப்பிடுகிறரா என்பதை உறுதி செய்த பின்னரே அவர் உணவு சாப்பிடுவார்.
சின்னதுரை தன்னிட வேலை பார்க்கும் டிரைவர் தான் என்றாலும் அவரை வாங்க, போங்க என்று மரியாதையுடன் அழைத்து வந்தார் வைகோ. ஒரு போதும் வேலைக்காரர் என்று யாரையும் எண்ணமாட்டார் வைகோ. இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால் வைகோவுக்கு சற்று முன்கோபம் அதிகம். அதேபோல் உணர்ச்சிவசப்பட்டும் பேசக்கூடியவர். இது போன்ற தருணங்களில் வைகோவிடம் திட்டு வாங்கினாலும் கூட அவரை விட்டு விலகிச் செல்லாமல் ஓட்டுநராகவே டொடர்ந்தார் சின்னதுரை.
இந்நிலையில் சொந்த ஊருக்கு சென்றிருந்த போது, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஓட்டுநரின் மறைவுச் செய்தியை தொலைபேசி மூலம் நேற்றிரவு அறிந்த வைகோ துடிதுடித்துப் போயிருக்கிறார். இன்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு பிற்பகல் நெல்லை சென்று தனது சாரதி உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார்.












Click it and Unblock the Notifications