பிரச்சினையில்லை..செய்ய வேண்டியது நிறைய இருக்கு! திரும்ப வருவேன்..ஆபரேசனுக்கு முன் வைகோவின் வார்த்தை!
சென்னை: மதிமுக பொது செயலாளர் வைகோவுக்கு இன்று அறுவை சிகிச்சை நடக்க இருக்கும் நிலையில், தான் நலமுடன் இருப்பதாகவும் தமிழகத்திற்கு செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது என உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.
மதிமுக நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த 25ஆம் தேதி சென்னையில் இருந்து நெல்லை நோக்கி சென்ற வைகோ அங்கு நிர்வாகியின் வீட்டில் தங்கி இருந்தார்.

அப்போது வீட்டின் மாடிக்குச் செல்வதற்காக படிக்கட்டில் ஏறிய போது அவரது கால் இடறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு வலது தோளில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது. இதை அடுத்து அங்கிருந்த நிர்வாகிகள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இதனையடுத்து வைகோவின் வயது மற்றும் உடல்நிலை கருதி அவரை விமானம் மூலம் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர் வைகோ சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்ட நிலையில் லேசான எலும்பு முறிவு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதை அடுத்து இன்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் தான் முழு உடல் நலத்துடன் இருப்பதாகவும் ஆரோக்கியத்தோடு மீண்டும் வருவேன் என மருத்துவமனையில் இருந்தபடியே வீடியோ வெளியிட்டு இருக்கிறார் மதிமுக பொதுச் செயலாளரான வைகோ. அதில்,"அன்புள்ளம் கொண்ட தமிழ் பெருமக்களே தமிழகத்தில் ஒரு பொது ஊழியம் செய்யும் சாதாரண மனிதனான இந்த வைகோ ஏறத்தாழ 7 ஆயிரம் கிலோமீட்டர் நடந்திருக்கிறேன்... கீழே விழுந்ததில்லை..
இப்பொழுது நான்கு நாட்களுக்கு முன்னர் நெல்லைக்குச் சென்று இருந்த இடத்தில் தங்கி இருந்த வீட்டில் படிகளின் வழியாக ஏறாமல் பக்கத்திலே இருந்த திண்ணையில் ஏறினேன். அப்படியே நிலை தடுமாறி இடது புறமாக சாய்ந்து விட்டேன். எனக்கு தலையில் அடிபட்டு இருந்தாலும் முதுகில் அடிபட்டிருந்தாலோ இயங்க முடியாமல் போயிருப்பேன்.. இப்போது இடது தோள்பட்டையின் கிண்ணம் உடைந்திருக்கிறது.. அதோடு அந்த எலும்பும் கீறி இருக்கிறது..
அந்த கிண்ணம் தோள்பட்டையில் இருந்து விலகி இருப்பதை திரும்ப பொருத்திவிட்டு, இரண்டு சென்டிமீட்டர் எலும்பு உடைந்து இருக்கிறது .அதையும் சேர்த்து இன்று அறுவை சிகிச்சை செய்யலாம் என்று மருத்துவர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள் அப்பல்லோ மருத்துவமனையில்.. ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.. முழு ஆரோக்கியத்தோடு திரும்ப வருவேன்.. முன்பு போல இயங்க முடியுமா என்று யாரும் சந்தேகப்பட வேண்டாம்..
நான் உழைப்பு என்பதற்கு இலக்கணமாக இருக்கக்கூடியவன் என்பதை கலைஞரே சொல்லி இருக்கிறார்.. ஆகவே எனவே தோழர்கள் பொதுவாழ்வில் அக்கறை உள்ளவர்கள் அனைவருக்கும் ஒன்றை நான் சொல்லிக் கொள்கிறேன்.. இந்த தமிழ்நாட்டுக்கு செய்ய வேண்டியதை செய்வதற்காக காத்துக் கொண்டிருக்கிற வைகோ.. முழு உடல்நலத்தோடு பரிபூரண ஆரோக்கியத்தோடு வருவேன் என்பதையும் எனக்காக பிரார்த்திக்கும் உள்ளங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.
முன்னதாக நேற்று,"தலைவர் பற்றி வெளிவரும் எந்த செய்தியையும் புறந்தள்ளுங்கள். கழகத் தோழர்கள் உள்ளிட்ட தலைவரின் மீது அன்பு கொண்ட பலர் ஆர்வ மிகுதியிலும், கவலையிலும் தலைவரை நேரில் சந்திக்க வருகிறோம் என, என்னிடம் தெரிவித்து வருகிறார்கள். நம்முடைய வருகையால் மருத்துவமனை நிர்வாகத்திற்கும், பிற நோயாளிகளுக்கும் எந்தவித இடையூறும் வந்துவிடக் கூடாது என்பதால், யாரும் தலைவரை சந்திக்க வர வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். " அவரது மகனும் மதிமுக முதன்மை செயலருமான துரை வைகோ வீடியோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications