சபாஷ் சபாநாயகர்! வைகோவின் பாராட்டு மழையில் நனையும் அப்பாவு; விஷயம் இது தான்!
சென்னை: மாநில அரசால் இயற்றப்படும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கு காலக்கெடு கோரிய சபாநாயகர் அப்பாவுவை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டியுள்ளார்.
சிம்லாவில் நடைபெற்ற சபாநாயகர்கள் மாநாட்டில் அப்பாவு பேசியதை குறிப்பிட்டு அவர் கருத்துக்கு மதிமுக ஆதரவளிப்பதாக கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

ரப்பர் ஸ்டாம்ப்
இன்றைய ஆட்சியாளர்கள், நாடாளுமன்றம், சட்டமன்றங்களை ஒரு அஞ்சல் பெட்டி போலக் கருதுகின்றார்கள். சட்ட முன் வரைவுகளின் மீது உறுப்பினர்களின் கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்வதற்கு இடம் தருவது இல்லை; விளக்கம் தர முனைவது இல்லை. மாறாக, எந்த ஒரு எதிர்க்கருத்தும் எழுந்துவிடக் கூடாது என்பதில் முனைப்பாக இருக்கின்றார்கள்; நாடாளுமன்ற, சட்டமன்றங்களை ரப்பர் ஸ்டாம்ப் ஆக்க முனைகின்றார்கள்; படிப்படியாகக் குடியரசுத் தலைவரின் ஆட்சிமுறைக்குக் கொண்டு போக முனைகின்றார்கள் என்பதை அப்பாவு சுட்டிக் காட்டி இருக்கின்றார்.

ஆளுநர்
சட்டமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் இயற்றிய சட்டங்கள், ஆளுநரின் ஒப்புதலைப் பெறுவதற்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆனால், அதன் மீது ஆளுநர் எந்த முடிவும் மேற்கொள்ளாமல், நிறுத்தி வைக்கின்றார்; திருப்பி அனுப்புவது இல்லை. அதற்கான கால வரையறை எதுவும் இல்லை. ஆளுநருக்கு ஏதேனும் ஐயம் இருக்குமானால், அதுகுறித்து அவர் விளக்கம் கேட்க வேண்டும்; குறைகளைச் சுட்டிக் காட்டித் திருப்பி அனுப்ப வேண்டும். ஆனால், பல மாதங்கள் ஆனாலும், குடிஅரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்புவதே இல்லை.

காலத்தின் தேவை
குடிஅரசுத் தலைவரும், ஆளுநரும், கூடிய விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என, அரசு அமைப்புச் சட்டம் கூறுகின்றது. அது எவ்வளவு காலம்? அதற்கான காலக்கெடு என்ன? ஆளுநர்கள் ஒப்புதல் அளிப்பதற்கும், திருப்பி அனுப்புவதற்கும், குடிஅரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதற்கும் கால வரையறை வகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.

7 தமிழர்கள்
குறிப்பாக, ஏழு தமிழர்கள் விடுதலை குறித்த பிரச்சினையில், தமிழ்நாடு அமைச்சர்கள் அவை கூடி நிறைவேற்றிய தீர்மானம் மீது, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஆளுநர் முடிவு எதுவும் எடுக்கவில்லை. திருப்பி அனுப்பவும் இல்லை. உள்துறை அமைச்சகத்தின் கருத்தைக் கேட்டதாகத் தகவல்கள் வந்தன. அவ்வாறு, கருத்துக் கேட்பதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை.

மக்கள் விருப்பம்
இந்தப் பிரச்சினையில், தமிழ்நாடு சட்டமன்றத்தின் இறையாண்மை கேள்விக்குறி ஆகி இருக்கின்றது. ஆளுநர்களை, ஒன்றிய அரசு தேர்வு செய்து அனுப்புகின்றது. அவர்கள், பெயர் அளவிற்குத்தான் ஆட்சித் தலைவர்கள் ஆவர். மக்களால் தேர்ந்து எடுக்கப்பட் சட்டமன்றம் இயற்றிய சட்டத்திற்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைப்பது, மக்களுடைய விருப்பங்களுக்கு எதிரானது ஆகும்.

என்ன காரணம்?
மற்றொன்று, மாநில அரசு இயற்றிய ஒரு சட்டத்திற்கு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பும்போது, அதற்கான காரணங்கள் என்ன என்பதைக் கூற வேண்டாமா? இல்லை என்றால், அந்தச் சட்டத்தில் உள்ள குறைகள் என்ன என்பதை, சட்டமன்றம் எப்படி அறிந்து கொள்வது? நாட்டு மக்கள் எப்படி அறிந்து கொள்வது? அவ்வாறு குறைகளைத் தெரிவித்தால்தானே, அவற்றைக் களைந்து, புதிய, மேம்படுத்தப்பட்ட சட்டத்தை இயற்ற முடியும்? என்ற கருத்தையும் முன்வைத்து இருக்கின்றார். அவரது கருத்துகளை, மறுமலர்ச்சி தி.மு.கழகம் ஆதரிக்கின்றது.












Click it and Unblock the Notifications