1000 கிடா வெட்டி பிரியாணி! விறால் மீன் வறுவல்! தினகரன் வீட்டு திருமண வரவேற்பு ஸ்பெசல்!
சென்னை: நாளை டிடிவி தினகரன் மகள் திருமண வரவேற்பு நடைபெறுகிறது. இதற்காக 1000 கிடா வெட்டி பிரியாணி, விறால் மீன் வறுவல் என பிரம்மாண்ட வகையில் திருமண ஏற்பாடுகள் நடைபெறுகிறது.
அதிமுகவில் உட்கட்சி பூசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னரே சசிகலா மீண்டும் அதிமுகவில் வரலாம் என்று தகவல் பரவியது.
நிலைமை இப்படி இருக்க நேற்றைய தினம் அதிமுகவில் சசிகலாவைச் சேர்ப்பதைப் பற்றி தலைமை நிர்வாகிகள் சேர்ந்து முடிவு எடுப்பார்கள் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கூறியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

டிடிவி மகள்
இந்தச் சூழலில் தமிழ்நாடு முழுவதும் ஒரு வாரக் கால சுற்றுப் பயணத்தை சசிகலா தொடங்கியுள்ளார். முதலாவதாக அவர் தற்போது தஞ்சை சென்றுள்ளார். வல்லம் பகுதியில் அவருக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. நாளை டிடிவி தினகரன் மகள் ஜெயஹரிணி மற்றும் காங்கிரஸின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளர் கிருஷ்ணசாமி வாண்டையார் மகன் ராமநாத துளசி ஐயா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பூண்டியில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இந்த திருமண வரவேற்பில் சசிகலா கலந்து கொள்ளவுள்ளார்.

பிரமாண்டம்
நாளை காலை 11 முதல் 3 மணி வரை இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பங்கேற்கத் தஞ்சை வந்துள்ள சசிகலா, அருளானந்த நகரில் உள்ள பங்களாவில் ஓய்வெடுக்கிறார். பூண்டி புஷ்பம் கல்லூரில் வளாகத்தில் இதற்காக ஏற்பாடுகள் மிகப் பிரமாண்ட முறையில் நடைபெற்று வருகிறது. இந்த வரவேற்பு கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகளும் பங்கேற்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

உணவு
அதிக கூட்டம் இருக்கும் என்பதால் ஆயிரக்கணக்கானோர் சாப்பிடக்கூடிய வகையிலான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதில் வரும் நிர்வாகிகளுக்கு சுமார் 1,000 கிடா ஆடுகளை வெட்டி பிரியாணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விறால் மீன் வறுவல் தொடங்கி உணவிலும் பிரமாண்ட லிஸ்ட் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமையல் பணிகளை மட்டும் சுமார் 600க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் கவனித்து வருகின்றனர்.

மதுரை
நாளை காலை 11 மணியளவில் வரவேற்பு விழா நடக்கும் அரங்கத்திற்கு சசிகலா வருவார் என்று கூறப்படுகிறது. இதன் பிறகு சசிகலா மதுரை கிளம்பிச் செல்லவுள்ளார். அங்கு வரும் 29ஆம் தேதி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கும் தெப்பக்குளம் மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். அதன் பிறகு மீண்டும் தஞ்சைக்குத் திரும்புகிறார்.

சசிகலா திட்டம்
தேர்தல் முடிந்ததில் இருந்தே அதிமுக நிர்வாகிகள் உடன் பேசும் ஆடியோக்களை வெளியிட்டுப் பரபரப்பைக் கிளப்பிக் கொண்டிருந்தார் சசிகலா. இந்தச் சூழலில் தான் அவர்,கடந்த 16ஆம் தேதி ஜெயலலிதா, எம்ஜிஆர் சமாதிக்குச் சென்று மரியாதை செலுத்தினார். அதன் பிறகு 17ஆம் தேதி எம்ஜிஆர் நினைவு இல்லத்துக்குச் சென்றவர், தான் அதிமுகவின் பொதுச் செயலாளர் எனப் பொறிக்கப்பட்ட கல்வெட்டை திறந்து வைத்திருந்தார். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, விரைவில் ஆக்டிவ் அரசியலுக்கு சசிகலா திரும்ப வாய்ப்புகள் மிக அதிகம் என்றே கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications