வேற வழியே இல்லை.. மேகதாது விவகாரம் தொடர்பாக.. மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மேல்முறையீடு செல்கிறது தமிழக அரசு
சென்னை: மேகதாது அணை விவகாரத்தில், தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம்கோர்ட்டில் முறையீடு செய்ய, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது... ஆனாலும் நாங்கள் கட்டியே தீருவோம் என்று கர்நாடகா பிடிவாதம் பிடித்து வருகிறது..
மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்கக்கூடாது என்று தமிழக அனைத்து கட்சி குழு டெல்லி சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியது... அதேசமயம் மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் கர்நாடக பாஜகவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சுப்ரீம்கோர்ட்
மற்றொரு பக்கம் சட்டரீதியான விவகாரங்களும் நடந்து வருகின்றன.. அந்த வகையில், மேகதாதுவில் அணை கட்டப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு கலைக்கப்பட்டதை எதிர்த்து, தமிழக அரசு சுப்ரீம்கோரட்டில் ஏற்கனவே அப்பீல் செய்துள்ளது... மேகதாதுவில் அணை கட்டப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட குழுவை கலைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த ஜுன் 16ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.. இதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம்கோர்ட்டை நாடியிருந்தது.

நீர்வளத்துறை
இந்நிலையில், மேகதாது அணை விவகாரத்தில், தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம்கோர்ட்டில் முறையீடு செய்ய, தமிழக அரசு முடிவு செய்துள்ளது... இதுதொடர்பான, தமிழக நீர்வளத் துறையின் கொள்கை விளக்க குறிப்பில் உள்ள விவரங்கள் இதுதான்:

நிலுவை
"கர்நாடக அரசு, மேகதாதுவில், காவிரியின் குறுக்கே அணை கட்ட முதற்கட்ட பணிகளை மேற்கொள்வதாக வந்த தகவல் அடிப்படையில், மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியது.அதில், கர்நாடகம் உத்தேசித்துள்ள மேகதாது அணை திட்டம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

சுற்றுசூழல்
எனவே, எந்தவொரு நடவடிக்கையையும், கர்நாடக அரசு எடுக்கக் கூடாது என, வலியுறுத்தும்படி கேட்கப்பட்டது. இதற்கிடையே, ஊடக தகவல் அடிப்படையில், தேசிய பசுமை தீர்ப்பாயம் தெற்கு மண்டலம், தன்னிச்சையாக ஒரு வழக்கை எடுத்து விசாரித்தது... ஒரு குழு அமைத்து, கட்டுமான பணிகள் துவங்கப்பட்டுள்ளதா; அதனால், சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய சேதங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க, மே 21ல் உத்தரவிட்டது.

மனு
எனினும், கர்நாடக அரசு சமர்ப்பித்த மேல் முறையீட்டு மனுவில், மேகதாது குறித்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக கூறி, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு, அந்த மனுவை முடித்து வைப்பதாக ஜுன், 17ல் ஆணையிட்டது.தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு, தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு அளிக்காமலேயே, இவ்வழக்கை முடித்து வைத்தது.

மேகதாது
எனவே, அந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது... இது தொடர்பாக, ஒரு உரிமையியல் முறையீட்டு மனுவை, விரைவில் சுப்ரீம்கோரட்டில் தாக்கல் செய்ய உள்ளது.மேகதாதுவிலோ அல்லது வேறு எந்தவொரு இடத்திலோ, காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஆகியவற்றை மீறும் வகையில், அணையை கட்டுவதற்காக கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் தடுத்து நிறுத்தப்படும்... தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்கவும், அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications