தமிழ் படம் ஓடாது..வாட்டாள் வார்னிங்! தலைகீழா நின்னாலும் முடியாது.. ஒரே வரியில் துரைமுருகன் பதில்..!
சென்னை: மேகதாது அணை கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு ஒரு மாதத்திற்குள் ஆட்சேபம் இல்லை என அறிவிக்காவிட்டால் கர்நாடகாவில் தமிழ்த் திரைப்படங்கள் ஓடாது என கன்னட சலுவாலி இயக்க தலைவரான வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். தமிழ்நாடு அரசு அனுமதி கொடுக்காமல் கர்நாடகா தலைகீழாக நின்றாலும் அணையை கட்ட முடியாது என பதில் அளித்துள்ளார்.
காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டியே தீருவோம் என்ற முடிவில் கர்நாடக அரசு பிடிவாதமாக இருக்கும் நிலையில், கடந்த 2022 ஜூன் மாதம் 22ஆம் தேதி காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம், 23ஆம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அப்போது தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதும் தொடர்ந்து மேகதாதுவில் அணை கட்டிய தீருவோம் என காங்கிரஸ் அரசின் முதலமைச்சர் சித்தராமையா கூறியிருக்கிறார்.
அதே நேரத்தில் மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரசுடன் கூட்டணி அமைத்திருக்கும் திமுக மேகதாது விவகாரத்தில் அமைதி காப்பதாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில் கர்நாடகாவில் தமிழ்நாடு மோதல் மட்டுமல்லாது கர்நாடகா மகாராஷ்டிரா மாநிலம் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. கர்நாடகா மகாராஷ்டிரா இடையே போக்குவரத்து சேவையில் தகராறு காரணமாக கன்னட அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளன. மேலும் வரும் 22ஆம் தேதி மாநிலம் தழுவிய பந்த் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கன்னட அமைப்புகளின் பார்வை தமிழ்நாடு பக்கமும் திரும்பி இருக்கிறது. மேகதாது பகுதியில் அணை கட்ட தமிழ்நாடு அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வரும் நிலையில் அதனை கண்டித்து கன்னட சலுவளியா கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்புகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று கிருஷ்ணகிரி ஓசூர் அருகே கர்நாடக தமிழக எல்லையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதோடு தமிழகத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை ஆனேக்கல் போலீசார் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கன்னட சலுவளி கட்சியின் தலைவரான வாட்டாள் நாகராஜ்," மகாராஷ்டிரா மாநிலத்தை மட்டுமல்ல தமிழக அரசு கண்டித்தும் பந்த் நடத்தப்பட உள்ளது. மேகதாது அணைய கட்ட எவ்வித ஆட்சேபனையும் இல்லை என ஒரு மாதத்திற்குள் தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் .ஸ்டாலின் மட்டுமல்ல தமிழக தலைவர்கள் அனைவரும் மேகதாது அணைக்கு எதிராக இருக்கிறார்கள். ஒரு மாதத்திற்குள் ஆட்சேபனை இல்லை என தெரிவிக்காவிட்டால் முதல் போராட்டமாக கர்நாடக மாநிலத்தில் தமிழ்த் திரைப்படங்களை ஓட விடமாட்டோம். காவிரி நீர் கடலில் கலப்பதை தடுக்கவே நாங்கள் மேகதாது அணையை கட்டுகிறோம். காவிரி, மேகதாது, மாதாகி உள்ளிட்ட அணைகளுக்காக தமிழகம் மகாராஷ்டிரா மாநிலங்களை கண்டித்தும் மாநிலம் தளவிய பந்த் நடக்கும்" என அவர் கூறினார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு தரப்பிலிருந்து பதில் அளித்து இருக்கிறார் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சரான துரைமுருகன். வேலூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடனுதவி வழங்கி பேசினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவரிடம் மேகதாது அணை விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் "தமிழ்நாடு அரசு அனுமதி கொடுக்காமல் கர்நாடகா தலைகீழாக நின்னாலும் அணையை கட்ட முடியாது" என்றார்.












Click it and Unblock the Notifications