தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் வெப்பம்! இது தான் காரணமாம்..விளக்கும் தென்மண்டல வானிலை இயக்குநர்
சென்னை: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதற்கான காரணத்தை தென் மண்டல வானிலை இயக்குநர் பாலச்சந்திரன் விளக்கி உள்ளார்.
பொதுவாக தமிழக்தில் ஏப்ரல், மே மாதங்களில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே மார்ச் மாதம் முதலே வெயிலின் தாக்கம் மிக மோசமாக உள்ளது.
அதுவும் கத்தரி வெயில் காலத்தில் வெயில் பல இடங்களில் சதம் அடித்து வருகிறது. இதன் காரணமாகப் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.

வெயிலின் தாக்கம்
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டை விட மோசமாகிக் கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து தென் மண்டல வானிலை இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் விளக்கினார். இது குறித்து அவர் பேசுகையில், "இப்போது உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.

என்ன காரணம்
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 8ஆம் தேதி புயலாக உருமாறி வடமேற்கு திசையில் மத்திய வங்கக் கடல் பகுதியில் நகரும். இதனால் வட மாவட்டங்களில் வெப்பநிலை 3 டிகிரி வரை அதிகரிக்கும். தினசரி காலை 11 முதல் மாலை 4 வரை வெப்பம் அதிகமாக இருக்கும். புவி வெப்ப மயமாதல், நகரமயமாதல் உள்ளிட்ட காரணங்களால் வெப்பநிலை அதிகரிக்கும்.

சில இடங்களில் மழை
கடந்த ஏப்ரல் மாதம் வேலூரில் 43 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. சுற்றுச் சூழலைப் பொறுத்து வெப்பம் மாறும்போது காற்றழுத்த விசை உள்வாங்கி, நிலம், நீர், காற்று, சக்தி பரிமாற்றம் மாறுபாடு அடையும். இதன் காரணமாக சில இடங்களில் மட்டும் அதிகளவு மழை பெய்யும். நகர்ப்புறங்களில் உள்ள வாகனங்களில் இருந்து அதிகளவு வெளியேறும் கரியமில வாயுக்கள், திட்டமிடாத நகரமயமாக்கல் உள்ளிட்டவை தான் அதிக வெப்பம் ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது.

கோடைக் காலம்
கோடைக் காலத்தில் காற்றில் தரைக்காற்று கடலோரப் பகுதிகளில் இருக்கும். மேகம் உருவாவது, கோடைமழை பெய்வதால் வெப்பம் அதிகரிப்பது போன்ற நிகழ்வுகள் இருக்கும். மேற்கு வடமேற்கு திசைகளில் காற்று வீசுவதால் வெப்பநிலை அதிகரிக்கும். தமிழ்நாடு முழுக்க வானிலையைக் கண்காணிக்கத் தானியங்கி மையங்களுக்கு 75 மழை மானிகள் நிறுவப்பட்டு உள்ளது. எஞ்சிய இடங்களில் மத்திய அரசு மூலம் உபகரணங்கள் அளிக்கப்படும்" என்றும் அவர் தெரிவித்தார்.

முக்கியம்
தமிழகத்தில் கத்தரி வெயில் தொடங்கிய பின்னர், கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிகபட்சமாக வேலூரில் சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. தினமும் மாநிலத்தில் குறைந்தது 10 இடங்களில் வெயிலின் தாக்கம் சதம் அடித்து வருகிறது. இந்தச் சூழலில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பது குறித்து தென் மண்டல வானிலை இயக்குநர் பாலச்சந்திரன் கூறிய கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications