சென்னையில் விடிய விடிய மது விற்பனை.. 24 மணி நேரமும் சப்ளை.. நள்ளிரவில் போராட்டத்தில் இறங்கிய மக்கள்!
சென்னை: சென்னை சிஐடி நகர் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் விடிய விடிய மது விற்பனை நடப்பதைக் கண்டித்து நள்ளிரவில் பொதுமக்கள் திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் செயல்பட வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. அதே போல டாஸ்மாக் அருகில் உள்ள பார்களுக்கும் திறந்து மூட அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் இந்த பார்கள் எந்த விதிமுறைகளையும் கடைப்பிடிப்பதும் இல்லை டாஸ்மாக், மதுவிலக்கு அதிகாரிகளும் கண்டுகொள்வது இல்லை.

விதிகளை மீறி 24 மணி நேரமும் டாஸ்மாக் பார்களில் மது விற்பனை நடைபெறுகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் 24 மணி நேரமும் டாஸ்மாக் பார்கள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக சென்னை சிஐடி நகர் பகுதியில் செயல்படும் மதுக்கடையில் விடிய விடிய மது விற்பனை நடப்பதால் அந்த பகுதியில் பெண்கள், குழந்தைகள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பகல் நேரத்தில், அதாவது டாஸ்மாக் கடைகளின் வழக்கமான விற்பனை நேரத்தில் விற்பனையாகும் மதுபானங்கள் போல் அனைத்து ரக மதுபானங்களும் 24 மணி நேரமும் கிடைப்பதால் இளைஞர் சமுதாயம் மதுவுக்கு அடிமையாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் கண்டித்து வந்தனர்.
இந்நிலையில், டாஸ்மாக் கடை 24 மணி நேரம் செயல்படுவதை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் நள்ளிரவில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் கடைக்கு முன்பாக திரண்டு மது விற்பனையைக் கண்டித்தனர்.
இதையடுத்து தகவல் அறிந்து வந்த சைதாப்பேட்டை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். கடைகள் விதிகளை மீறி இயங்கினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications