பகலில் வெயில்.. நள்ளிரவில் பெய்யும் மழை.. ஜில்லென மாறிய வானிலை.. மகிழ்ச்சியில் சென்னைவாசிகள்
சென்னை: பகலில் சுள்ளென வெயிலடித்தாலும் இரவு நேரங்களில் ஜில்லென மழை பெய்வதால் சென்னை பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
குளு குளு சீசன் போல குளிர் காற்று வீசுவதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாத பிற்பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தென்மேற்கு பருவமழை பொறுத்த வரையில் இந்த ஆண்டு இயல்பான மழை அளவை விட ஆறு சதவீதம் அதிகமாக ஜூன் 1 தேதியிலிருந்து தற்போது வரை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேற்கு திசை காற்றும், தென்மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி வடதமிழகம் பகுதியில் நிலவுகிறது. வளிமண்டலத்தின் கீழ் அடுக்கிற்கும் மேல் அடுக்கிற்கும் இடையிலான நிலைத் தன்மை குறைந்து இடி மழைக் கூட்டங்கள் உருவாகி மேற்கில் இருந்து கிழக்காக நகர்ந்து கடற்பகுதி அருகே வலுப்பெற்றது.
இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக தமிழகத்திலும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகப்பட்சமாக ஜமீன் கொரட்டூரில் 14 சென்டிமீட்டர் மழை பதிவானது. தென்மேற்கு பருவமழை பொறுத்த வரையிலும் ஜூன் 1 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் 162 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழை அளவு 153 மில்லிமீட்டரை விட 6 சதவிகிதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னையில் பகல் நேரங்களில் வெயிலடித்தாலும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்றைய தினம் நள்ளிரவில் சென்னை சென்ட்ரல், பாரிமுனை, ராயப்பேட்டை, புளியந்தோப்பு, எழும்பூர், ஆயிரம் விளக்கு, வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
நேற்று பகல் நல்ல வெயில் அடித்து வந்த நிலையில் திடீரென இரவில் மழை பெய்தது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து மூன்று நாட்களாக சென்னையில் இரவு நேரத்தில் மழை பெய்து வருவதால் சென்னையில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது.












Click it and Unblock the Notifications