பழ.கருப்பையா மகனிடம் மைக் பறிப்பு... புத்தகக் காட்சியில் தொடரும் சர்ச்சைகள்
சென்னை: பழ.கருப்பையா மகன் பேராசிரியர் ஆறுமுகத்தமிழன் சென்னை புத்தகக் காட்சியில் பேசிக்கொண்டிருந்த போது அவரிடம் இருந்து மைக் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் பத்திரிகையாளர் அன்பழகன் அமைத்திருந்த ஸ்டாலை புத்தகக் காட்சியில் இருந்து எடுக்க வைத்த பபாசி இப்போது ஆறுமுகத்தமிழன் பேச்சை பாதியில் நிறுத்தப்பட்டதன் மூலம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
இது போன்ற சம்பவங்களால் பபாசி மீது வாசகர்களுக்கும், பொதுமக்களுக்கும் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

சர்ச்சை
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பாக ஆண்டுதோறும் சென்னையில் பிரமாண்ட முறையில் புத்தகக் காட்சி நடத்தப்படுகிறது. சுமார் 700-க்கும் மேற்பட்ட அரங்குகளில் கோடிக்கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இப்போது தொடர் சர்ச்சைகளில் சிக்குவது குறிப்பிடத்தக்கது.

மைக் பறிப்பு
பழ.கருப்பையா மகனும், சிறந்த சொற்பொழிவாளருமான பேராசிரியர் ஆறுமுகத்தமிழன் சென்னை புத்தகக் காட்சியில் நேற்று உரையாற்றிக்கொண்டிருந்தார். அப்போது குறுக்கீடு செய்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஒருவர், ஆறுமுகத்தமிழனிடம் இருந்து மைக்கை பறித்தார். இதனைப் பார்த்த வாசகர்கள் கொந்தளித்தனர்.

பபாசி அலுவலகம்
இதையடுத்து பபாசி அலுவலகத்தை முற்றுகையிட்ட வாசகர்கள் ஆறுமுகத்தமிழன் பேச்சை பாதியில் நிறுத்த என்ன காரணம், யார் அழுத்தம் கொடுத்தது எனக் கேட்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில் பபாசிக்கு எதிராக வாசகர்கள் திரண்டது இதுவே முதல்முறையாகும்.

கல் எறி
பழ.கருப்பையா மகன் ஆறுமுகத்தமிழன் தனது பேச்சை நிறுத்தாவிட்டால் கல் எறிவோம் என சிலர் மிரட்டல் விடுத்ததால் பேச்சை பாதியில் நிறுத்தியதாக பபாசி தரப்பில் விளக்கம் தரப்பட்ட போது, அதனை ஏற்க மறுத்த வாசகர்கள் பிறகு எதற்கு காவல்துறை இருக்கிறது என பதில் கேள்வி எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications