நாங்கள் தேமுதிகவை எப்போதும் மறக்கமாட்டோம்... உருகிய அமைச்சர் சி.வி.சண்முகம்
சென்னை: கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சியை பிடிக்க தேமுதிகவும் ஒரு காரணம் என்பதால் நாங்கள் நன்றி மறக்கமாட்டோம் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட கஞ்சனூரில் தேமுதிக நிர்வாகிகள் மத்தியில் பேசும் போது அவர் இதனைக் கூறினார். விக்கிரவாண்டி தொகுதியை எப்பாடுபட்டாவது கைப்பற்ற வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு தேர்தல் பணியில் இறங்கியுள்ளார் அமைச்சர் சி.வி.சண்முகம். விக்கிரவாண்டி தொகுதி வெற்றியை தனது கவுரவ பிரச்சனையாக கருதுவதால் சி.வி.சண்முகம் அதிரடி காட்டி வருகிறார்.
இந்நிலையில் திமுகவும் தங்கள் கைவசம் இருந்த தொகுதியை அதிமுகவிடம் பறிகொடுத்துவிடக்கூடாது என முஷ்டி முறுக்கி வருகிறது. திமுகவுக்கு வாக்குகளை வளைக்கும் பணியை ஜெகத்ரட்சகன் சத்தமில்லாமல் செய்து வருகிறார். இந்நிலையில் பா.ம.க.வும், தேமுதிகவும் உற்சாகமில்லாமல் தேர்தல் பணிகளில் பங்கெடுத்துள்ளதாக அதிமுக நிர்வாகிகள் கூறியதை அடுத்து இரண்டு கட்சி தொண்டர்களையும் உற்சாகப்படுத்தும் வகையில் செல்லும் இடமெல்லாம் பேசி வருகிறார் சி.வி.சண்முகம்.
தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் ஏற்பாடு செய்த தேமுதிக நிர்வாகிகள் கூட்டம் கஞ்சனூரில் நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுக ஆட்சிக்கு அடித்தளமே தேமுதிக தான் என ஒரே போடாக போட்டார். மேலும், விஜயகாந்த் மட்டும் உடல்நலத்துடன் இருந்திருந்தால் ஸ்டாலின் இருக்கும் இடம் தெரியாமல் போயிருப்பார் எனக் கூறினார். தேமுதிக செய்த உதவியை நாங்கள் நன்றி மறக்கவில்லை எனப் பேசி தேமுதிக நிர்வாகிகளை மனம் குளிரச் செய்தார்.
இதனிடையே ஸ்டாலின் அடையாளம் தெரியாமல் போயிருப்பார் என அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதைக் கண்டித்து, நேற்று பொன்முடி சுடச்சுட காட்டமான அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.