ED சோதனைக்கு மத்தியில் டெல்லி சென்றது ஏன்? சிரித்தபடியே அமைச்சர் துரைமுருகன் கொடுத்த விளக்கம்!
சென்னை: அமலாக்கத்துறை சோதனைக்கு இடையே டெல்லி பயணம் ஏன்? என்பது குறித்து அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். செய்தியாளர்களின் கேள்விக்கு சிரித்தபடி பதில் அளித்துள்ளார் துரைமுருகன்.
வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியில் திமுக பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மற்றும் அவரது மகனும், வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்த் வீடு மற்றும் பொறியியல் கல்லூரியில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அதேபோன்று, அமைச்சர் துரைமுருகனுக்கு நெருக்கமான திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் என்பவரது வீடு, அவருக்கு சொந்தமான சிமெண்ட் குடோன் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனை நடந்தபோது முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்திய அமைச்சர் துரைமுருகன், அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "வீட்டிற்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை. வேலைக்காரர்களுக்கும் யார் வந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. சோதனை தொடர்பாக உங்களுக்கு எந்த அளவு தெரியுமோ, அதே அளவுதான் எனக்கும் தெரியும்" என்று கூறினார்.
காட்பாடியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் வீட்டில் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனை இரவு 2 மணி அளவில் நிறைவடைந்தது. அவருக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் சுமார் 44 மணி நேரம் சோதனை நடைபெற்றது. முக்கிய ஆவணங்கள், ஹார்டு டிஸ்க்குகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமலாக்கத் துறையினர், அமைச்சர் துரைமுருகன் வீட்டில் சோதனை செய்த போது அங்கு இருந்த வேலூர் துணை மேயர் சுனில் குமார், செய்தியாளர்களிடம் கூறும்போது, அமலாக்கத் துறையினர் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும் அது குறித்த விவரங்களை தங்களுக்கு எழுதிக் கொடுத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.
அமலாக்கத்துறை சோதனைக்கு மத்தியில் அமைச்சர் துரைமுருகன், டெல்லி சென்றார். அமைச்சர் துரைமுருகன் திடீர் டெல்லி பயணம் அரசியலில் புதிய விவாதங்களைக் கிளப்பியது. இந்நிலையில், நேற்றிரவு விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், "எனது இலாகா சம்பந்தமாக டெல்லிக்கு சென்றுவிட்டு வருகிறேன். அமலாக்கத்துறை சோதனை பழகிப்போனதுதான். நீங்கள் பத்திரிகைகளில் எழுதியிருக்கும் கதைக்கெல்லாம் நான் ஆள் இல்லை. அமலாக்கத்துறை ரெய்டுக்கும் இந்தப் பயணத்துக்கும் சம்மந்தம் இல்லை" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications