வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு ரத்து! அதிமுக ஆட்சியின் அவசர கோலமே காரணம்! துரைமுருகன் விளக்கம்!
சென்னை: வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு ரத்து குறித்து சட்ட வல்லுநர்களிடம் தீவிரமாக ஆலோசித்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் அவசரக் கோலத்தில் இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டதே ரத்து காரணம் என அவர் குற்றஞ்சாட்டினார்.
முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்படி மூத்த வழக்கறிஞர்களை கொண்டு இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு நடத்தி வந்ததாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

வன்னியர் இட ஒதுக்கீடு
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இட ஒதுக்கீடு தொடர்பாக 7 வினாக்களை எழுப்பிய நீதிமன்றம் அவற்றுக்கு தமிழக அரசுத் தரப்பில் போதிய விளக்கம் அளிக்கப்படவில்லை எனக் கூறி வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு மூத்த வழக்கறிஞர்களை கொண்டு வாதிடப்பட்டு வந்தது.

பாமக வாதம்
பாமகவும் தனது பங்குக்கு இட ஒதுக்கீடு கோரி தனது தரப்பு நியாயங்களையும், வாதங்களையும் முன் வைத்து வந்தது. இந்நிலையில் இட ஒதுக்கீடு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பையே உச்சநீதிமன்றமும் தனது தீர்ப்பின் மூலம் உறுதி செய்துள்ளது. இதனிடையே இது தொடர்பாக அறிக்கை விடுத்துள்ள அமைச்சர் துரைமுருகன், வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு ரத்து குறித்து சட்ட வல்லுநர்களிடம் தீவிரமாக ஆலோசித்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

துரைமுருகன் அறிக்கை
மேலும் இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது; ''மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில், வன்னியர் உள்ளிட்ட சில சமுதாயத்தினருக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டை ரத்து செய்து உச்சநீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வழங்கியுள்ளது. எந்த ஒரு பிரிவினருக்கும் உள்ஓதுக்கீடு வழங்கிட மாநில அரசுக்கு உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ள போதிலும், இந்த சிறப்பு ஒதுக்கீட்டிற்கு அடிப்படையான தரவுகள் சரியாக இல்லை என்றும், இதற்காக அமைக்கப்பட்ட ஆணையத்தின் பரிந்துரைகள் சரியான ஆதாரங்களின்றி வழங்கப்பட்டுள்ளதாகவும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.''

அடிப்படைத் தரவுகள்
''கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில், கலைஞர் கொண்டு வந்த அருந்ததியினர் மற்றும் இஸ்லாமியருக்கான உள்ஒதுக்கீட்டு முறைகள் அனைத்திற்கும் சரியான ஆதாரங்களின் அடிப்படையில் சட்டங்கள் முறையாக இயற்றப்பட்டதால், அனைத்து நீதிமன்றங்களாலும் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டு, தமிழ்நாட்டில் சமூகநீதி நிலைநாட்டப்பட்டுள்ளதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். ஆனால், முந்தைய அ.தி.மு.க ஆட்சியில், தேர்தல் நேரத்தில் அரசியல் காரணங்களுக்காக அவசர கோலத்தில் அள்ளித்தெளித்தது போல சரியான அடிப்படைத் தரவுகள் இன்றி இந்த சிறப்பு ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதால்தான் உச்சநீதிமன்றத்தால் இச்சட்டம் இரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டுவிட்டது. ''

சட்ட வல்லுநர்கள்
''முதலமைச்சர் அறிவுறுத்தியபடி, மூத்த வழக்கறிஞர்களை நியமித்து, இந்த வழக்கு தொடர்பாக அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு முழுமூச்சுடன் மேற்கொண்டும், இத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், இது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்ட வல்லுநர்களிடம் தீவிரமாக கலந்தாலோசித்து தமிழக அரசு முடிவு எடுக்கும்.''












Click it and Unblock the Notifications