பட்டு பட்டுன்னு அடிக்கனும்! வளவளன்னு இழுக்கக் கூடாது! எம்.எல்.ஏ.க்களுக்கு பாடம் எடுத்த துரைமுருகன்!
சென்னை: சட்டசபையில் கேட்க வரும் கேள்விகளை எம்.எல்.ஏ.க்கள் பட்டு பட்டுன்னு அடிக்கனும் என்றும் அதை விடுத்து சுற்றிவளைத்து பேசி அதிக நேரம் எடுத்துக்கொள்ளக் கூடாது எனவும் அவை முன்னவரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் அட்வைஸ் அளித்துள்ளார்.
ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் கேள்வி நேரத்தின் போது நாள் தோறும் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் நிலையில் அவர் இந்த அறிவுரையை வழங்கியுள்ளார்.
அமைச்சர் துரைமுருகனின் அட்வைஸ் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் பொருந்தும் என சபாநாயகர் அப்பாவுவும் தெரிவித்தார்.

தமிழக சட்டசபை
தமிழக சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்றது. முன்னதாக கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் மீன் வளக் கல்லூரி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என அதிமுக எம்.எல்.ஏ. அக்ரி கிருஷ்ணமூர்த்தி வினவினார்.

அமைச்சர் பதில்
அதற்கு மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதிலளித்து அமர்ந்த பிறகு மீண்டும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஏதோ கூற வந்தார். இதனிடையே அவை முன்னவரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் எப்படி வேகமாக கேள்வி கேட்க வேண்டும் என ஒரு பாடமே நடத்தினார். கேட்க வரும் கேள்விகளை பட்டு பட்டுன்னு அடிக்கனும் என்றும் அதை விடுத்து சுற்றி வளைத்துப் பேசி பேரவையின் நேரத்தை வீணடிக்கக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.

பொது அறிவுரை
அமைச்சர் துரைமுருகன் இதனை அக்ரி கிருஷ்ணமூர்த்திக்காக மட்டும் கூறவில்லை. அண்மைக்காலமாக கேள்வி நேரங்களில் சட்டமன்ற உறுப்பினர்கள் நீட்டி முழங்குவதும், பேச வருவதை விடுத்து புகழாரம் சூட்டுவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்தச் சூழலில் இது குறித்து சபாநாயகர் என்ற முறையில் அப்பாவுவும் எத்தனையோ முறை கண்டிப்பு காட்டி அமர வைத்து எல்லோருக்கும் பேச வாய்ப்பு வழங்கி வருகிறார். ஆனாலும் ஒரு சிலர் பிடிவாதமாக பேசும் நிகழ்வுகளும் இருக்கின்றன.

எல்லோருக்கும் பொருந்தும்
அமைச்சர் துரைமுருகனின் அறிவுரை அகிரி கிருஷ்ணமூர்த்திக்கானது மட்டுமல்ல எல்லோருக்குமானது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். இதனால் சட்டசபையில் சிரிப்பலை எழுந்தது. இன்னும் 5 நாட்கள் மட்டுமே சட்டசபை நடைபெறவுள்ள நிலையில் கேள்வி நேரத்தின் ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications