"விஜய்யை விட எடப்பாடிக்கு அதிக கூட்டம் வருது.. விஜய் செயலால் தான் நெரிசல்".. அமைச்சர் வேலு ஒரே போடு!
சென்னை: "விஜய்யை விட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிக கூட்டம் கூடியது. எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் நெரிசல் ஏற்படவில்லை. விஜய்யின் செயலால் தான் தவெக கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது." என சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.
கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை கூட்டத்தில் கூட்ட நெரிசலிலி சிக்கி 41 பேர் வரை உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை ஆணையம் அமைத்து, புலன் விசாரணையையும் முடுக்கி விட்டது தமிழக அரசு. தற்போது இது தொடர்பான வழக்கு உச்சநீதீமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்நிலையில் தமிழக சட்டசபையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் கரூர் விவகாரம் தொடர்பாக இன்று பேசினார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட பலரும் கரூர் சம்பவம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று கோரியிருந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கரூர் சம்பவம் குறித்து சட்டசபையில் விளக்கம் அளித்தார்.
இந்த விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தவிர்த்திருக்கலாம். கரூருக்கு முன்னதாக 4 மாவட்டங்களில் விஜய் பிரசாரம் செய்திருந்தார்.
அப்போது கூடிய கூட்டத்தை வைத்து கரூரில் எவ்வளவு பேர் கூடுவார்கள் என்று காவல்துறையும் உளவுத்துறையும் அரசுக்கு எண்ணிக்கை அளித்திருக்கும். அதற்கேற்ப பாதுகாப்பு வழங்கியிருந்தால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கும். வேலுச்சாமிபுரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று அதிமுக கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தவெகவுக்கு அந்த பகுதியில் அனுமதி அளித்தது ஏன்? இது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது." எனப் பேசினார்.
இதையடுத்து இந்த விவகாரம் பற்றி சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் எ.வ. வேலு "விஜய்யை விட எடப்பாடி பழனிசாமிக்கு அதிக கூட்டம் கூடியது. கரூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் நெரிசல் ஏற்படவில்லை. விஜய்யின் செயலால் தான் தவெக கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது.
காரணம், எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதை கவனிக்க வருகிறார்கள். அவரும் பேருந்தில் ஏறி பேசுகிறார். எதிர்க்கட்சித் தலைவர் பேருந்தின் மீது ஏறி இரண்டு பக்கமும் கை காட்டுவதால் நெரிசல் ஏற்படவில்லை. விஜய் உள்ளேயே அமர்ந்து செல்கிறார். பேசும் இடத்தில் மட்டுமே மேலே வருகிறார்; அதனால் நெரிசல். கரூரில் காவல்துறை பொறுப்புடன் மிகச் சிறப்பாகவே செயல்பட்டது" என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications