மேடையில் மண்டியிட்டார்.. பாடம் நடத்தினார்.. பரிசு தந்தார்.. கடைசியில் பஞ்ச்.. அசத்திய ஜெயக்குமார்
பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கிய அமைச்சர் ஜெயக்குமார் பாடம் நடத்தினார்
Recommended Video
சென்னை: "இங்கதான் நான் படிச்சேன்.. இதுதான் என் ஸ்கூல்" என்று சொல்லிய அமைச்சர் ஜெயக்குமார், மேடையிலேயே மண்டியிட்டு தலைவணங்கினார்.
பல திறமைகளை உள்ளடக்கியவர் அமைச்சர் ஜெயக்குமார். பாடுவார், கவிதை எழுதுவார், ட்ரோன் பிளேன் முதல் எல்லா வாகனங்களையும் ஓட்டி பார்க்க ஆசைப்படுவார், அதே சமயம் சீரியஸான அரசியல் விவகாரங்களை பற்றியும் பேசுவார்.
இந்நிலையில், சென்னை ராயபுரத்தில் உள்ள கேசி சங்கரலிங்க நாடார் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மடிக் கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.
பள்ளியில் நுழைந்தது முதல் முகமெல்லாம் ஜெயக்குமாருக்கு பூரிப்பாக இருந்தது. காரணம், இந்த பள்ளியில்தான் அமைச்சர் படிச்சாராம். அதனால், மேடையிலேயே மாணவர்கள் முன்னிலையில் மண்டியிட்டு வணங்கினார். இதை தொடர்ந்து மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கினார்.
பிறகு அமைச்சர் திடீரென ஒரு கிளாஸ் ரூமுக்கு சென்று பாடம் நடத்த ஆரம்பித்தார். கையில் சாக்பீஸ் எடுத்து கொண்டு போர்டில் எழுதினார். மாணவர்களிடம் சில கேள்விகளையும் கேட்டார். சரியான பதில் சொன்ன மாணவர்களுக்கு 500 ரூபாய் ஆன் தி ஸ்பாட் பரிசு தந்து அசத்தினார்.
கடைசியாக செய்தியாளர்களிடம் பேசியபோது, ராஜ்யசபா வேட்பாளர் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என்று சொன்னதுடன், தனி மரம் தோப்பாகாது, கருவேலம் போன்ற தினகரன் எதற்கும் பயன்பட மாட்டார் என்று ஒரு பஞ்ச் வைத்துவிட்டு போனார்.