குண்டர் சட்டம் போட்டது போலீஸ்.. ரத்து செய்தது கோர்ட்.. நாங்கள் ஒன்றும் செய்யவில்லை.. ஜெயக்குமார்
சென்னை: பொள்ளாச்சி விவகாரத்தில் யாருக்கும் ஆதரவாக செயல்படவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வயப்படுத்தி அவர்களை பலாத்காரம் செய்து பணம் பறித்தது அண்மையில் அம்பலமானது. இதையடுத்து திருநாவுக்கரசு, சபரி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் அடைக்க கோவை மாவட்ட ஆட்சியர் கடந்த மார்ச் மாதம் உத்தரவு பிறப்பித்தார்.

உத்தரவு
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி திருநாவுக்கரசுவின் தாயும் சபரிராஜனின் தாயும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவது குறித்து உறவினர்களுக்கு முறையாக தெரிவிக்கப்படாததால் இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தது.

குண்டர் சட்டம் ரத்து
இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில் பொள்ளாச்சியில் இளம்பெண்களை சீரழித்த கயவர்களுக்கு கடும் தண்டனை வேண்டும். குண்டர் சட்டம் ரத்தாவதற்கு காவல்துறை அதிகாரிகள் சிலர் துணை போயுள்ளனர்.

செயல்படவில்லை
சட்டத்தின் முன்பு நிறுத்தி தயவின்றி தண்டனை தர வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளிக்கும்படியாக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் பொள்ளாச்சி விவகாரத்தில் யாருக்கும் ஆதரவாக நாங்கள் செயல்படவில்லை.

நீதிமன்றம்
குண்டர் சட்டத்தை போட்டது போலீஸ். அதை ரத்து செய்ய உத்தரவிட்டது நீதிமன்றம். எனவே ஸ்டாலின் கேள்வி கேட்க விரும்பினால் நீதிமன்றத்தைத்தான் கேட்க வேண்டும் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications