அரசு மருத்துவமனையில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ்! கொரோனா நெகட்டிவ்! வேறென்ன பாதிப்பு?
சென்னை: ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திடீர் உடல் நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார்.
கடும் காய்ச்சல் மற்றும் உடல் வலி காரணமாக அவதிப்பட்ட அவர், இதன் காரணமாக நேற்றைய தினம் சட்டசபைக்கு கூட செல்ல முடியாமல் அவதிப்பட்டிருக்கிறார்.
இதனிடையே நேற்று மாலை 4 மணியளவில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மருத்துவர்கள் ஆலோசனைப் படி உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை உள்ளிட்ட இன்னும் பல உடல் நல பரிசோதனைகள் நடத்தப்பட்டதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது கண்டறியப்பட்டது.
இதனால் நிம்மதி பெருமூச்சு விட்ட அமைச்சரின் குடும்பத்தினர், இது குறித்த தகவலை முதல்வர் அலுவலகத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளனர்.
இதனிடையே அமைச்சர் கயல்விழி செல்வராஜுக்கு பாக்டீரியல் இன்ஃபெக்ஷன் தான் என்றும் அதனால் அவரது உடல் நலம் பற்றி கவலை கொள்ள தேவையில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இன்று மாலையோ அல்லது நாளை காலையோ அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் 2 நாட்களாவது அவர் வீட்டில் ஓய்வெடுப்பார் என்றும் அதன் பிறகே அவர பேரவை நிகழ்வுகளில் பங்கேற்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஆதி திராவிடர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவுள்ளதால் அது தொடர்பான முன்னேற்பாடு பணிகளையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவாரே கவனித்து வருகிறார் கயல்விழி செல்வராஜ்.












Click it and Unblock the Notifications