“அமித்ஷாவே நினைத்தாலும் திமுகவை தோற்கடிக்க முடியாது.. மீண்டும் ஸ்டாலின் தான்”: அமைச்சர் கேஎன் நேரு
சென்னை: "வேரோடு பிடுங்கி எறிந்தால் திமுக பெரிதாக முளைக்கும். அமித்ஷாவே நினைத்தாலும் திமுகவை தோற்கடிக்க முடியாது" என பதிலடி கொடுத்துள்ளார் அமைச்சர் கேஎன் நேரு.
பாஜகவின் தென்மண்டல பூத் கமிட்டியின் முதல் மாநாடு நெல்லை மாவட்டம் தச்சநல்லூரில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது திமுகவை வேரோடு பிடுங்கி எறிவோம் என்றார்.

இந்த மாநாட்டில் பேசிய அமித் ஷா, "நாடாளுமன்றத்தில் 130-வது சட்டத்தில் திருத்தம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த சட்டம் கொண்டு வந்தால் பிரதமர், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் யாரும் 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களின் பதவி பறிக்கப்படும். இதற்காக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு குரல் கொடுத்து குதிக்கிறார்கள்.
அவர்களை நான் கேட்கிறேன். தமிழகத்தில் அமைச்சராக இருந்த பொன்முடி, செந்தில்பாலாஜி பல மாதங்களாக சிறையில் இருந்தனர். அவர்களால் ஆட்சியாளர்களாக இருக்க முடியுமா? ஜெயிலில் இருந்து கொண்டே ஆட்சி நடத்த முடியுமா? இந்த சட்டத்திருத்தத்தை மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்க்கிறார். அவர் இந்த சட்டத்திருத்தத்தை கருப்புச்சட்டம் என்று கூறுகிறார். கருப்புச்சட்டம் என்று கூறுவதற்கு அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. உரிமையும் இல்லை. ஏனெனில் அவர் தான் இருட்டு, கருப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்தியாவிலேயே ஏராளமான ஊழல்களை தி.மு.க. அரசு செய்து வருகிறது. இந்த அரசின் ஊழல் பட்டியல் நீளமானது. டாஸ்மாக், எல்காட், போக்குவரத்து, இலவச வேட்டி- சேலை, குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்திலும் ஊழல் செய்து கொண்டு இருக்கிறார்கள். இந்தியா கூட்டணியினர் ஒரு கனவு காண்கிறார்கள். அது என்னவென்றால் உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என்றும், சோனியா காந்தி, ராகுல் காந்தியை பிரதமர் ஆக்க வேண்டும் என்றும் நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.
அது ஒரு போதும் நடக்காது. உதயநிதி ஸ்டாலின் ஒரு நாளும் முதலமைச்சராக வரமுடியாது. ராகுல் காந்தி ஒரு நாளும் பிரதமராக முடியாது. வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அரசை வேரோடு பிடுங்கி அகற்றுவோம். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்." எனப் பேசினார்.
இந்நிலையில், அமித் ஷா பேச்சுக்கு திமுக அமைச்சர் கே.என்.நேரு பதில் கொடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நேரு, "விவசாயத்தில் மட்டும்தான் வேரோடு அகற்ற முடியும். எங்களை எதுவும் செய்ய முடியாது. வேரோடு பிடுங்கி எறிந்தால் திமுக பெரிதாக முளைக்கும். அமித்ஷாவே நினைத்தாலும் திமுகவை தோற்கடிக்க முடியாது. 15 ஆண்டுகளாக அந்த வேலையை தான் அவர்கள் செய்கிறார்கள். பாஜகவால் ஒன்றும் செய்ய முடியாது.
தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தான். திமுக கூட்டணிதான் வெற்றி பெற்று வருகிறது. பாஜகவினர் ஆசை ஒருபோதும் நிறைவேறாது. அவர்கள் நினைப்பது எதுவும் நடக்காது. திமுகவிற்கு போட்டியே கிடையாது. தொடர்ந்து திமுக வெற்றி பெறும். இதே நெல்லை தொகுதியில் நாங்கள் வென்று காட்டுவோம்.
அதிமுக - பாஜக கூட்டணி பொருந்தாக் கூட்டணி. அதை வைத்துக்கொண்டு ஆட்சிக்கு வந்துவிடுவோம் என கூறி வருகிறார்கள். கூட்டணி விவகாரத்தில் இரு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்களும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். மக்களின் பெரும் ஆதரவால் வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவார்." எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications