குப்பைகள் இல்லாத நகரங்கள்! நடிகர் யோகிபாபுவை வைத்து விழிப்புணர்வு! அமைச்சர் நேருவின் புதிய முயற்சி!
சென்னை: குப்பைகள் இல்லாத நகரங்களை உருவாக்கவும், திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவும் குறும்படங்களை வெளியிட்டுள்ளார் அமைச்சர் கே.என்.நேரு.
அதில் நடிகர் யோகிபாபு மூலம் கழிவு மேலாண்மை குறித்தும், குப்பைகள் இல்லாத நகரங்களை உருவாக்குவது பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சித்துள்ளார்.
இது தொடர்பாக அந்த நிகழ்வில் அமைச்சர் நேரு தெரிவித்ததாவது:

''நகரங்களை தூய்மையாக்குவதற்கும், குப்பையில்லா நகரங்களை உருவாக்குவதற்கும் 'தூய்மையான மக்கள் இயக்கத்தினை' 03.06.2022 அன்று முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த விழிப்புணர்வு இயக்கத்தின் கீழ் 4 வகையான தலைப்புகளில் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் அனைத்து நகர்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த விழிப்புணர்வு இயக்கத்தை மேலும் மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையால் 4 வகையான தலைப்புகளில் தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு குறும்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
தூய்மை பழக்கவழக்கங்களை நடைமுறைப்படுத்தி அதனை நீடித்து நிலைக்கச் செய்திட தூய்மை இந்தியா திட்டம் 2.0 தொடங்கப்பட்டது. அனைத்து நகரங்களையும் குப்பைகள் இல்லாத நகரங்களாகவும், திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நகரங்களாகவும் ஆக்குவதே தூய்மை இந்தியா திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும்.
இத்திட்டத்தின் கீழ் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத நகரங்களாக 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் கழிப்பறைகளை வழங்குவதன் மூலம், அனைத்து நகர்ப்புறங்களையும் தொடர்ந்து 'திறந்தவெளி மலம் கழிக்காத நகரங்களாக' நீடித்து நிலைக்கச் செய்திட இந்த அரசு உறுதிபூண்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் நகர்ப்புற உள்ளாட்சிகளில் தேவைக்கேற்ப தனி நபர் வீட்டுக் கழிப்பறைகள், சமுதாயக் கழிப்பறைகள், பொது கழிப்பறைகள், திடக்கழிவு மேலாண்மை வசதிகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட நீர் மேலாண்மை வசதிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.''












Click it and Unblock the Notifications