அமெரிக்கா பறக்கிறார் மா.சுப்பிரமணியன்.. ஹார்வர்டு பல்கலை. சபையேறும் தமிழக அரசின் திட்டம்!
சென்னை: அமெரிக்கா செல்ல இருக்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழக அரசின் “மக்களை தேடி மருத்துவம்” திட்டம் குறித்து உரையாற்ற இருக்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
இன்று (ஜூலை 1) இரவு அமெரிக்கா புறப்படுகிறார் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். இதில் இரண்டு முக்கியமான விஷயங்கள் அரங்கேறவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஒன்று, தமிழகத்தில் மருத்துவ துறை திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தும் வகையில் போதிய நிதியுதவி தேவைப்படுகிறது.

சென்னை வேளச்சேரியில் மருத்துவத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சென்னை சைதாப்பேட்டையில் சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சைதாப்பேட்டையில் குடிநீரில் கழிவுநீர் கலந்தது என்றால் மற்ற யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லையே. அங்குள்ள அனைத்து வீடுகளிலும் நேரடியாக கேட்டு வருகிறோம். யாருக்கும் பாதிப்பில்லை.
சைதாப்பேட்டை சிறுவன் மரணம் தொடர்பான மருத்துவ அறிக்கை 2 நாட்களில் வந்துவிடும். இன்று முதல் ஆகஸ்ட் 31 வரை வயிற்றுப்போக்கு தடுப்பு, வைட்டமின் முகாம் நடைபெறும். 1 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு ORS பவுடர் பாக்கெட்டுகள் மற்றும் 14 ஜிங்க் மாத்திரைகள் வழங்கப்படும். அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் ORS மற்றும் 14 ஜிங்க் மாத்திரைகள் வழங்கப்படும்.” எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் குறித்து பேச அமெரிக்க பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் 'மக்களை தேடி மருத்துவம்” குறித்து மாணவர்களிடம் உரையாற்ற உள்ளேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வழக்கு முடிந்தால்தான் இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை குறித்து முடிவு எடுக்கப்படும்.தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இன்று இரவு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அமெரிக்கா செல்லும் நிலையில், விரைவில் முதல்வர் ஸ்டாலினும் அமெரிக்கா செல்ல உள்ளார்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்று புதிய முதலீடுகள் ஈர்க்கவுள்ளதாக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்திருந்தார்.
திமுக அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு முதல்வர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலமாக தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன் பெற்று வருகின்றனர். வீடுகளுக்கே சென்று பரிசோதித்து மருந்து மாத்திரைகள் வழங்கும் அரசின் இந்தத் திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications