நண்பனொருவன் வந்த பிறகு! முதல்வரான மோடி.. பணக்காரரான அதானி -வரலாற்றை போட்டுடைத்த அமைச்சர் மனோதங்கராஜ்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி 2001 ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சரான பிறகே தொழிலதிபர் கவுதம் அதானியின் தொழில் மற்றும் வியாபாரம் உயரத் தொடங்கியதாக தமிழ்நாடு அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்து உள்ளார்.
இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் அதானி, கடந்த சில ஆண்டுகளாக இமாலய வளர்ச்சியை அடைந்து இருக்கிறார். துறைமுகம், விமான நிலையம், எரிசக்தி, தொலைதொடர்பு என பல துறைகளில் கால்பதித்து வருகிறது அதானி குழுமம்.
இப்படி தொடர்ந்து தொழில் வளர்ச்சியில் ஏற்றம்கண்டு வரும் அதானி, கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்த முகேஷ் அம்பானியை முறியடித்தார்.

உலக பணக்காரர்கள் பட்டியல்
இதனை தொடர்ந்து முன்னேறிய அதானி ஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியலிலும் முதலிடத்தை பிடித்தார். உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 10 வது இடத்தில் இருந்த அதானி படிப்படியாக முன்னேறி கடந்த ஜூலை மாதம் உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளி 4 வது இடத்துக்கு முன்னேறினார்.

3 வது இடம்
இந்த நிலையில் அதானியின் சொத்து மதிப்பு 137.4 பில்லியன் டாலராக அதிகரித்து இருக்கிறது. இதன் மூலம் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்து வந்த பெர்னார்ட் அர்னால்டை பின்னுக்கு தள்ளி கவுதம் அதானி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் டெஸ்லா அதிபர் எலான் மஸ்கும், 2 வது இடத்தில் அமேசான் அதிபர் ஜெஃப் பெசோசும் உள்ளனர்.

அமைச்சர் மனோ தங்கராஜ்
இதுகுறித்து தமிழ்நாடு தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேஸ்புக்கில் பதிவிட்டு இருப்பதாவது, "2001ல் நரேந்திர மோதி குஜராத் முதல்வரான பிறகுதான், கெளதம் அதானியின் தொழிலும் வியாபாரமும் உயரே பறக்கத் தொடங்கின" என்கிறார் அரசியல் நிபுணர் ஜேம்ஸ் கிராப்ட்ரீ. அதனடிப்படையில் பார்க்கையில், இன்று அதானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 3-ம் இடம் பிடித்திருக்கிறார் என்பதில் ஆச்சரியம் இல்லை.

இதான் முதல் வேலை
ஒரு நாட்டை ஆள்பவரால், அவரது நண்பருக்கு இப்படி ஒரு இடம் பிடித்துக்கொடுப்பது தானே முதல் வேலை. கடந்தவாரம் பிட்ச் குழுமத்தின் ஆய்வறிக்கையில், அதானி குழுமம் 2.2 லட்சம் கோடி கடன் வைத்திருப்பதாகவும், அந்த கடனை அவரால் கட்ட முடியாமல் கூடப் போகலாம் என்றும் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டிருந்தது. என்ன நடந்தாலும், உலகின் 3-வது பணக்காரருக்கு அதிக கடன் கொடுத்த நாடு என்ற பெருமையை, இந்தியப் பிரதமர் நமக்குப் பெற்றுத் தந்துள்ளார்." என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications