அடித்து நொறுக்க போகும் மிக்ஜம் புயல்.. ஆவின் பால் தடையின்றி கிடைக்குமா? அமைச்சர் மனோ தங்கராஜ் பதில்
சென்னை: மிக்ஜம் புயல் கரையைக் கடக்கும் போது அத்தியாவசிய பொருளான பால் கிடைக்குமா அல்லது அதற்கு எதாவது தட்டுப்பாடு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், அதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதில் அளித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இப்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இந்த மண்டலம் புயலாக வலுப்பெறும் நிலையில், இதற்கு மிக்ஜம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை டிசம்பர் 4ஆம் தமிழ்நாடு ஆந்திர எல்லையில் கரையைக் கடக்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பரவலாக மழை: இதன் காரணமாக ஏற்கனவே வடதமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது.. குறிப்பாகச் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்றிரவு பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. ஏற்கனவே, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் என 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், புயல் கரையைக் கடக்கும் போது தேவையான முன்னெச்சரிக்கை பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதார பணியாளர்கள் புயல் கரையைக் கடக்கும் போது தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகளுக்குத் தங்கு தடையில்லாமல் மின்சாரம் கிடைக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது அப்பகுதியில் உள்ளோருக்கு அலர்ட் மெசேஜ் அனுப்பவும் திட்டமிட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை: இது மட்டுமின்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 140 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. புயல் மற்றும் பேரிடர் காலங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களையும் சென்னை போலீசார் வெளியிட்டுள்ளன. புயல் கரையைக் கடந்தது அதிகாரப்பூர்வமாகத் தெரியும் வரை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் இடி, புயலின் போது மின் சாதனங்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக மின்கம்பங்கள், உலோகப் பொருட்கள் அல்லது மின்னலை ஈர்க்கும் இடங்களில் இருந்து முற்றிலுமாக விலகி இருக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பால் கிடைக்குமா: பொதுவாகப் புயல் கரையைக் கடக்கும் போது அனைவருக்கும் இருக்கும் ஒரே கேள்வி அத்தியாவசிய பொருளான பால் கிடைக்குமா அல்லது அதற்கு எதாவது தட்டுப்பாடு ஏற்படுமா என்பது தான். அதிலும் குழந்தைகள் இருக்கும் குடும்பங்களில் இது ரொம்பவே முக்கியமான ஒன்றாக இருக்கும். புயல் காரணமாகக் காற்று மிக மோசமாக அடிக்கும் என்ற சூழலில், இது பலருக்கும் கவலையை ஏற்படுத்தி இருந்தது.
இதற்கிடையே பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். பால் தங்கு தடையில்லாமல் கிடைக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், புயல் இருந்தாலும் தொடர்ந்து பால் கிடைக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications