அண்ணாமலை பெயரை நாசூக்காக தவிர்த்த அமைச்சர் மூர்த்தி! இதென்ன திணுசான அரசியலா இருக்கே!
சென்னை: பத்திரப்பதிவுக்கு கையூட்டு பெறப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடியோடு மறுத்து அறிக்கை விடுத்திருந்த அமைச்சர் மூர்த்தி, அதில் தன் மீது குற்றஞ்சாட்டிய அண்ணாமலை பற்றி வாய் திறக்காதது திணுசான அரசியலாக பார்க்கப்படுகிறது.
தமிழக பத்திரப்பதிவு அலுவலகங்களில் புரோக்கர்கள் லாபி நடப்பதாகவும் அமைச்சர் பெயரில் ஒரு பத்திரப்பதிவுக்கு ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் வசூலிக்கப்படுவதாகவும் கடந்த சனிக்கிழமை அன்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் குற்றஞ்சாட்டி பேசினார்.

அது எல்லா ஊடகங்களிலும் செய்தியாக வெளி வந்திருந்தது. இந்நிலையில் தன் மீதான குற்றச்சாட்டு மறுப்பு அறிக்கை விடுத்த அமைச்சர் மூர்த்தி, அதில் தன் மீது குற்றஞ்சாட்டிய அண்ணாமலை பற்றி வாயே திறக்கவில்லை. ''கற்பனையான மற்றும் பொய்களால் புனையப்பட்ட செய்தி பரப்பப்படுவதாகவும், தன் மீது உள்நோக்கம் கொண்டு திரிக்கப்பட்டு வருவதாகவும்'' பொத்தாம் பொதுவாக தெரிவித்திருந்தாரே தவிர தன் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்த அண்ணாமலைக்கு அமைச்சர் மூர்த்தி அந்த அறிக்கையில் பதிலடி கொடுக்கவில்லை.
இது என்ன திணுசான அரசியலாக இருக்கே என்ற விவாதம் எழுந்துள்ளது. கடந்த காலங்களில் அண்ணாமலைக்கு மிகக் கடுமையான முறையில் பதிலடிகள் கொடுத்தவர் அமைச்சர் செந்தில்பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இப்போது அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், மனோ தங்கராஜ், உள்ளிட்டோரும் அண்ணாமலை முன் வைக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு செய்தியாளர்கள் சந்திப்பின் போதும் சரி, சமூக வலைதளங்கள் மூலமும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
இதனிடையே இடைத்தரகர்களோ, ஆவண எழுத்தர்களோ அல்லது சார்பதிவாளர்களோ அல்லது அதற்கு மேல்நிலை அலுவலர்களோ பொதுமக்களிடம் ஆவணப் பதிவுக்காக கையூட்டு கேட்டால் இது குறித்த புகார்களை கீழ்கண்ட எண்களில் உடனடியாக தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் புகார் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள்: 9498452110, 9498452120, 9498452130 என்பதோடு அமைச்சர் மூர்த்தி சிம்பிளாக மறுப்பு அறிக்கையை முடித்துக்கொண்டார்.












Click it and Unblock the Notifications