கையில் லிஸ்டோடு எதிர் தரப்பு.. எப்படி சமாளிக்கப்போகிறார் சேகர்பாபு? சட்டசபையில் இன்று அனல் பறக்குமா?
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் இன்று, இந்து சமய அறநிலையத் துறை மீதான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது.
பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுக்கு, நெருக்கடி தர காத்திருக்கிறார்கள் என்பதால் அவையில், இன்று அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய தினம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சுற்றுலா கலை மற்றும் பண்பாட்டு துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது என்ற போதிலும் இந்து சமய அறநிலையத் துறை மீதான விவாதம் இந்த காலகட்டத்தில் மிகுந்த கவனம் ஈர்த்துள்ளது.

தொடர் விமர்சனங்கள்
இதற்கெல்லாம் காரணம், தமிழகத்தில் திமுக அரசு அமைந்த பிறகு அதிகப்படியாக எதிர்க்கட்சிகளால்.. அதிலும் குறிப்பாக, பாஜகவால் தொடர் விமர்சனங்களுக்கு ஆளாகி வரக்கூடியது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சகம்தான். அந்த துறை அமைச்சகம் எடுத்த அடுத்த அடுத்த, சில பெரிய முடிவுகள் தொடர்ந்து விவாதங்களாக மாறி வருகின்றன.

100 நாட்களில்
முக்கியமாக, பெரிய கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆட்சி அமைந்து 100 நாட்களில் இந்த இரண்டு பெரிய திட்டங்களும் அமலுக்கு வந்துள்ளன. தமிழில் அர்ச்சனை செய்வதற்கு அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இரு தினங்களுக்கு முன்பாக தள்ளுபடி செய்யப்பட்டது.

இன்றைய விவாதம்
இதோ, இப்போது, விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இவை அனைத்தும், மதரீதியான விவகாரங்கள் என்பதால் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக மற்றும் பாஜக இது பற்றி கேள்விகளை எழுப்ப வாய்ப்பிருக்கிறது.

திமுக vs பாஜக
ஆகம விதிகளின் அடிப்படையில் அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்றும், கோவில் சொத்துக்களை அரசிடம் இருந்து மீட்க வேண்டும் என்றும் பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் திமுக அரசு, பாஜக சொல்வதற்கு நேர் எதிர் திசையில் பயணம் செய்து கொண்டிருக்கிறது. எனவே இன்றைய தினம் பாஜக எம்எல்ஏக்கள் அனல் பறக்கும் விவாதத்தில் ஈடுபட வாய்ப்பு இருக்கிறது. இதற்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி தரவும் வாய்ப்பு இருக்கிறது.

சேகர் பாபு பதிலடி
சமீபத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்துவோம் என்று கூறியதற்கு பதிலடி, கொடுத்த சேகர்பாபு, இந்த உருட்டல் மிரட்டல்களுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம் என்று தெரிவித்தார். சட்டசபையிலும் இந்த விவகாரம் இன்று பூதாகரமாகி கிளம்புவதற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அனல் பறக்கும் வாத விவாதங்களுக்கு பிறகு, இறுதியில் வெளிநடப்பு போன்றவை நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பதால் இன்றைய அவை நடவடிக்கைகள் மக்களால் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications