பொன்முடி சொத்துக்குவிப்பு.. குறைந்த பட்ச தண்டனை கேட்ட பொன்முடி.. மருத்துவ அறிக்கை தாக்கல்
சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட பொன்முடிக்கு இன்று தண்டனை அறிவிக்கப்பட்டது. வயதையும், மருத்துவ காரணங்களையும் கூறி குறைந்த பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் அதனை ஏற்க நீதிபதி மறுத்து விட்டார்.
கடந்த 2006 முதல் 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் உயர் கல்வித்துறை அமைச்சராகவும், கனிம வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்த அமைச்சர் பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த, விழுப்புரம் மாவட்ட சிறப்பு நீதிமன்றம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி, இருவரையும் விடுதலை செய்து 2016 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் 2017 ம் ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் விசாரித்தார். லஞ்சஒழிப்பு தரப்பில், இந்த வழக்கில் வருமான வரி கணக்குகள், சொத்து விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள் உள்பட, 39 சாட்சிகளிடம் லஞ்ச ஒழிப்புத் துறை மேற்கொண்ட புலன் விசாரணையின் ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பு வழக்கறிஞர் பாபு முத்துமீரான் குறிப்பிட்டார்.
பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, அமைச்சர் பொன்முடி மனைவியின் வருமானத்தை, பொன்முடியின் வருமானமாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கணக்கிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், பொன்முடியின் மனைவிக்கு சொந்தமாக 110 ஏக்கர் விவசாய நிலம் உள்ளதாகவும், தனியாக வர்த்தகம் செய்வதாகவும், இவற்றை புலன் விசாரணை அதிகாரி கணக்கில் கொள்ளவில்லை எனவும் வாதிட்டார்.
குறிப்பிட்ட காலக் கட்டத்தில் பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் அவர் வாதிட்டார். இருதரப்பு வழக்கில் வாதங்கள் நிறைவடைந்து நவம்பர் 27ஆம் தேதி வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டு தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.
இந்த மேல்முறையீடு வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் கடந்த 2 தினங்களுக்கு முன்பு தீர்ப்பளித்தார். அதில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து, விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார். தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக வழக்கின் விசாரணையை வரும் 21ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
அன்றைய தினம், அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் நேரிலோ அல்லது காணொலி மூலமாகவோ ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் பொன்முடி, 64.90 சதவீத அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபணம் ஆகியுள்ளதாக நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இன்று காலையில் பொன்முடியும், அவரது மனைவி விசாலாட்சியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு ஆஜராகினர். அப்போது பொன்முடி மற்றும் அவரது மனைவியின் மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வயதையும் மருத்துவ காரணங்களையும் கணக்கில் கொண்டு குறைந்த பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி தண்டனை விபரங்களை வாசித்தார்.
அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.15 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி ஜெயச்சந்திரன். பொன்முடி அப்பீல் செய்யும் வகையில் 180 நாட்களுக்கு தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. 30 நாட்களுக்குள் அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றம் பொன்முடி குற்றவாளி என்று உறுதியாக கூறியுள்ளதால் எம்எல்ஏ பதவியும், அமைச்சர் பதவியும் தானாக காலியாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications