இவங்களுக்கெல்லாம் கூச்சமே இருக்காதா? அண்ணாமலையை விளாசிய கனகராஜ்.. பின்னாடியே வந்து பிடிஆர் சம்பவம்
சென்னை: 2026-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு நிச்சயமாக குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அண்ணாமலை பேசியதற்கு, அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் கடந்த பிப்ரவரி 4ம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' நடைபயணம் மேற்கொண்டார். அப்போது அவர் கெங்கநல்லூர் சந்தைமேடு பகுதியில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் உள்ள அணைக்கட்டு பஸ் ஸ்டாண்டிற்கு கட்சி தொண்டர்களுடன் நடைபயணமாக சென்றார்.

பின்னர் அண்ணாமலை அங்கிருந்தபடி பேசுகையில், "தமிழகத்தில் 9 ஆண்டுகள் காமராஜர் ஆட்சி செய்தார். அவர் ஆட்சி செய்த காலத்தில் பல மாவட்டங்களில் அணைகள் கட்டப்பட்டன. தடுப்பணை, குளம், குட்டைகள் கட்டப்பட்டன. அதன் பிறகு வந்த முதல்வர்கள் யாரும் அவரை போல் செயல்படவில்லை.
அணைக்கட்டு தொகுதியை பொறுத்தவரை திமுக மற்றும் அதிமுகவினர் பங்காளிகள் போல் மாறி மாறி சண்டை போட்டு கொண்டு வருகின்றனர். திமுகவினர் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக அதிமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதேபோல் சட்டத்திற்கு புறம்பாக கல்குவாரிகளில் ரூ.200 கோடிக்கு மேல் சம்பாதித்து விட்டதாக திமுகவினர் குற்றம் சாட்டுகிறார்கள்.

பாரத பிரதமர் நரேந்திரமோடி ஆட்சி காலத்தில் 500 நாட்களில் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கி இருக்கிறார். ஆனால் தமிழ்நாட்டில் குரூப்-1, குரூப்-2, குரூப்-4 தேர்வுகள் நடந்து முடிவுகள் வந்த பிறகும் அவர்களுக்கு பணி வழங்காமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. ஆனால்
2026-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு நிச்சயமாக குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். 9 தலைமுறைகளாக எனது குடும்பத்தில் யாரும் அரசு வேலை செய்யவில்லை. எனக்கு மட்டும்தான் அரசு வேலை கிடைத்தது. இந்த நிலைமை மாறி அரசு வேலை இல்லாத குடும்பத்திற்கு அரசு வேலை நிச்சயம் கிடைக்க வழி வகை செய்யப்படும்" என்றார்.
இதனிடையே பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் கருத்தை பலரும் விமர்சித்து வருகிறார்கள். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவது சாத்தியமே இல்லை என்று பலரும் தெரிவித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கனகராஜ், வெளியிட்ட பதிவில், "இவங்களுக்கெல்லாம் கூச்சமே இருக்காதா? இவங்க தலைவரு ஆண்டுக்கு 2 கோடி வேலைன்னாரு. அண்ணாமலையோ தமிழ்நாட்டுக்கு 2.397 கோடி வேலை தருவாராம். முதல்ல உங்க தலைவர்கிட்ட 100 நாள் வேலையை கொடுக்கச் சொல்லுங்க.ஒன்றிய அரசுப் பணிகளில் காலியாக உள்ள 10 லட்சம் பணியிடங்களை நிரப்ப சொல்லுங்க." என்று கூறியுள்ளார்.
இதனிடையே இந்த பதிவினை டேக் செய்து பதிவிட்டுள்ள அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், "ஒரு ஒப்பீட்டுக்கு-- தமிழ்நாட்டில் இப்போதிருக்கும் அரசுப் பணிகள் எண்ணிக்கை மொத்தம் சுமார் 9.5 லட்சம்... பாஜக கூறுவது என்னவென்றால், சுமார் 7.6 கோடி மக்கள் உள்ள மாநிலத்தில் 2.397 கோடி அரசு வேலைகள் வழங்கப்படும் என்று....அதாவது, குழந்தைகள், ஓய்வு பெற்றவர்களையும் உள்ளிட்ட மக்கள் தொகையில், கிட்டத்தட்ட 3-இல் ஒருவருக்கு அரசு வேலையாம்! அல்லது, வேலை செய்யும் வயதில் இருப்பவர்களில் சுமார் பாதி பேர் அரசு பணி செய்யப்போகிறார்களா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்கள்.












Click it and Unblock the Notifications