பஸ்ஸில் மகளிருக்கு ப்ரீ.. ஆண்களுக்கு கூடுதல் கட்டணமா? ஓபிஎஸ் புகார்.. அமைச்சர் ராஜகண்ணப்பன் பதில்
சென்னை : பேருந்துகளில் ஆண்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் குற்றச்சாட்டை போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மறுத்துள்ளார்.
Recommended Video
மாநகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் எனக் கூறிவிட்டு, ரூ. 5-க்கு விற்கப்பட்ட பயணச்சீட்டை ரூ. 10ஆக உயர்த்தி ஆண்களிடம் வசூல் செய்யப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் திங்கள்கிழமை குற்றம்சாட்டியிருந்தார்.
இது தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் திமுக அரசு பொறுப்பேற்றதும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப்போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் பயணிக்கும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும் பேருந்து பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்வதற்கான அறிவிப்பு முதலமைச்சரால் வெளியிடப்பட்டது.

அறிக்கை
அதன்படி, நகர பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் சில பகுதிகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படும் பேருந்துகளில், அந்த இழப்பை ஈடு செய்ய பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களிடம் குறைந்தபட்ச கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது எனவும் இதற்கு முன் 5 ரூபாய் என்பதுதான் குறைந்தபட்ச கட்டணமாக இருந்தது என்றும் சட்டத்துக்கு புறம்பாக அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறது என்றும், இதுகுறித்து போக்குவரத்து கழக நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, 'தவறு சீர்செய்யப்படும்' என்று பதில் அளித்ததாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

ஆண்களிடம் கூடுதல் கட்டணம்
மகளிருக்கு இலவச பயணம் என அறிவித்துவிட்டு அதை ஈடுகட்ட ஆண்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கான புதிய யுக்திகளை அரசு போக்குவரத்துக் கழகங்கள் கடைபிடிப்பது அரசாணைக்கு எதிரான செயல். இது அரசுக்கு அரசாங்கத்திற்கு தெரிந்து நடக்கிறதா அல்லது தெரியாமல் நடக்கிறதா என தெரியவில்லை.

பன்னீர்செல்வம் கண்டிப்பு
இதுபோன்ற கட்டண வசூல் மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே முதலமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு மகளிருக்கான இலவச பேருந்து பயணத்தால் ஏற்படும் இழப்பை ஆண்கள் தலையில் சுமத்துவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தி இருந்தார்.

கட்டணமில்லா பேருந்து
இந்த குற்றச்சாட்டிற்கு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று பதில் அளித்துள்ளார். அவர் கூறும் போது " அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் சொல்வதை போல அரசுப் பேருந்துகளில் ஆண்களுக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்யவில்லை. ஒரே ஒரு இடத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்த நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பொதுவாக குற்றம்சாட்டக்கூடாது. இதுவரை 6 கோடி பெண்கள் கட்டணமில்லா பேருந்து சேவையை பயன்படுத்தியுள்ளனர்" என்றார்.












Click it and Unblock the Notifications