ஆளுநர் மாளிகை ஒன்றும் அண்ணா அறிவாலயம் கிடையாது... அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பொளேர்
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுவதை கேட்கவும், அவர் கோரிக்கையை ஏற்கவும் ஆளுநர் மாளிகை ஒன்றும் அண்ணா அறிவாலயம் கிடையாது என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை பதவி நீக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ள நிலையில் அவர் இந்த கருத்தை தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே ராஜேந்திரபாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சி துணைத்தலைவரும், திமுக பொருளாளருமான துரைமுருகன் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ராஜேந்திர பாலாஜியை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் பண்ணுங்க.. ஆளுநரிடம் திமுக புகார் மனு
தொடர் சர்ச்சை
ஜெயலலிதா மரணத்திற்கு முன்புவரை அமைச்சரவையில் இப்படி ஒரு அமைச்சர் இருக்கிறாரா என்பதே பலருக்கும் தெரியாத வகையில் செயல்பட்டவர் ராஜேந்திரபாலாஜி. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த இவர் ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். எப்போதும் தனது கைகளில் நான்கைந்து வண்ணங்களில் கயிறு கட்டியிருப்பார். கடந்த ஒரு வருடகாலமாகவே அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அளிக்கும் பேட்டிகளும் , மேடை பேச்சுகளும் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது. எதைபற்றியும் சிந்திக்காமல் அவர் தெரிவிக்கும் கருத்துக்கள் முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு தலைவலியை ஏற்படுத்துகிறது.
கடும் எதிர்ப்பு
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், மதரீதியிலான சில கருத்துக்களை கூறியிருந்தார். அதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. திமுக எம்.எல்.ஏ.க்கள் அன்பழகனும், சுப்பிரமணியனும் ஆளுநரை காலை சந்தித்து ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்திய நிலையில், துரைமுருகன் ஆளுநருக்கு அதை வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார். அதில், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மதச்சார்பின்மைக்கு எதிராக பேசியதுடன் மக்களை மதரீதியாக துண்டாட பார்ப்பதாகவும் புகார் கூறியுள்ளார்.
சட்டரீதியாக
அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசிய வார்த்தைகளை தொகுத்து கடிதத்துடன் இணைத்த துரைமுருகன், அதனை தமிழக டி.ஜி.பி.திரிபாதிக்கும் அனுப்பி வைத்தார். ராஜேந்திரபாலாஜி மீது சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே அமைச்சர் கருப்பணன் மீது நடவடிக்கை கோரி ஆளுநரிடம் துரைமுருகன் புகார் மனு அளித்த நிலையில், ஒரே வாரத்தில் இப்போது இரண்டாவது புகாரையும் கூறியுள்ளார். எதிர்க்கட்சி துணைத் தலைவரான துரைமுருகன் புகார் மீது ஆளுநர் என்ன நடவடிக்கை எடுப்பார் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.
|
கேலி, கிண்டல்
அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை பதவி நீக்கக் கோரும் விவகாரத்தில் திமுக தீவிரம் காட்டி வரும் நிலையில், ஆளுநர் மாளிகை ஒன்றும் அண்ணா அறிவாலயம் கிடையாது. மு.க.ஸ்டாலின் கூறுவதை கேட்கவும், அவர் கோரிக்கையை ஏற்கவும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ட்வீட் செய்துள்ளார். இது திமுக தரப்பை மேலும் கொந்தளிக்க வைத்துள்ளதால், அடுத்தக்கட்டமாக வழக்கு தொடர்வது பற்றி திமுக தரப்பில் ஆலோசனை செய்யப்படுகிறது.