முகத்தை எங்கே வைத்துக் கொள்வார் எடப்பாடி பழனிசாமி? ‘ஈசிஆர் சம்பவ ட்விஸ்ட்’.. அமைச்சர் ரகுபதி கேள்வி!
சென்னை: ஈசிஆர் சாலையில் சென்ற பெண்களை காரில் துரத்திச் சென்று வழிமறித்து சீண்டலில் ஈடுபட்டவர்கள் அதிமுகவை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்பாரா என அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை ஈசிஆர் சாலையில் கானாத்தூர் அருகே நள்ளிரவில் காரில் வந்த பெண்களை திமுக கொடி கட்டப்பட்டிருந்த காரில் வந்தவர்கள் துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீசாரால் கைது செய்யப்பட்ட சந்துரு என்பவரின் வாக்குமூல வீடியோ ஒன்று நியூஸ் தமிழ் தொலைக்காட்சியில் வெளியானது. அந்த வீடியோவில் சந்துரு பேசுகையில், ஈசிஆர் வழக்கில் கார் ஓட்டியது, பெண்களை மடக்கியது நான்தான். ஏனென்றால் வண்டியை இடித்துவிட்டார்கள் என்று என்னுடன் இருந்த சந்தோஷ் என்பவர் கூறியதால் தான் காரை மடக்கினேன்.
ஆளுங்கட்சி கொடி மாட்டினால் சுங்கக் கட்டணம் கட்ட தேவையில்லை என்று சந்தோஷ் கூறியதால் தான் கொடியை காரில் மாட்டினோம். நான் எந்த கட்சியையும் சாராதவன். எங்கள் குடும்பத்தினர் தான் அதிமுக நிர்வாகிகள் எனக் கூறியுள்ளார்.
ஈசிஆரில் காரில் பெண்களை துரத்திய சம்பவத்தில் ஈடுபட்டு கைதான சந்துரு என்ற நபர் அதிமுக கட்சியைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தவர் எனக் கூறும் வீடியோ தற்போது பரவி வரும் நிலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள பதிவில், "முகத்தை எங்கே வைத்துக் கொள்வார் எடப்பாடி பழனிசாமி? திமுக ஆட்சியின் நலத்திட்டங்களால் மகளிர் முன்னேறுவதை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் பெண்களின் முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் திமுக அரசின் மீது பழி போட முயற்சிப்பதும் சில நாட்களிலேயே உண்மை தெரிய வந்து அந்த முயற்சி தோல்வியடைவதும் வாடிக்கையாகிவிட்டது.
அந்த வகையில் கிழக்கு கடற்கரை சாலையில் பெண்கள் பயணித்த காரை வழிமறித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சந்துரு என்ற முக்கிய குற்றவாளி அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர் என தனது பின்புலத்தை அவரே ஒப்புக் கொள்ளும் வீடியோ ஊடகங்களில் வெளியாகி வைரலாகியிருக்கிறது.
திமுக கொடியைக் காட்டி திமுக மீது பொய்யான வீண் பழி சுமத்தி அதன் மூலம் சுயநல அரசியல் செய்ய நினைத்தவர்களின் முகமூடி கிழிந்து தொங்குகிறது. பெண்கள் மீதான பாலியல் தாக்குதல், போக்ஸோ குற்றங்கள் என அதிமுகவை சேர்ந்தவர்களும் அவர்களது குடும்பத்தினரும்தான் பெண்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர் என்பது ஒவ்வொரு குற்றச் செயலின் பின்புலத்தையும் ஆராய்ந்தால் தெரிய வருகிறது.
திமுக மீது பொய் பழி போட்ட எதிர்க்கட்சிகள் இப்போது தங்கள் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார்கள்? வீராவேசமாக அறிக்கைவிட்ட பழனிசாமி மன்னிப்புக் கேட்பாரா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஈசிஆர் சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்திருந்தார். அப்போது, "சென்னை ஈ.சி.ஆர் சாலையில், காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர், சாலையின் நடுவில் மறித்து, அப்பெண்களை அச்சுறுத்தும் வகையில், சினிமா காட்சிகளைக் காட்டிலும் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்த முயன்ற காட்சி நெஞ்சை பதைக்க வைக்கிறது.
பெண்கள் இரவு நேரத்தில் நடமாடும் சுதந்திர உரிமை கூட ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் பறிக்கப்பட்டிருக்கிறதா? பெண்களுக்கு எதிரான குற்றங்களை மேற்கொள்ள திமுக கொடி உள்ளிட்ட ஆளுங்கட்சி அடையாளம் என்பது லைசன்சா? குற்றம் செய்பவர்கள் திமுகவினர் என்றால் காவல்துறை ஆமை வேகத்தில், காலம் தாழ்ந்து தான் செயல்படுமா?" என காட்டமாக கேள்விகளை எழுப்பி இருந்தார்.












Click it and Unblock the Notifications