“அவர்கள் Shadow Fighters".. அண்ணாமலை - சீமான் திடீர் மீட்டிங் பற்றி விமர்சித்த அமைச்சர் சேகர்பாபு!
சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் சந்திப்பு குறித்த கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார். "அவர்கள் நிழலோடு யுத்தம் செய்கிறார்கள். நாங்கள் நிஜத்தோடு யுத்தம் செய்கிறோம்." எனக் கூறியுள்ளார்.
சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பாக எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புளியந்தோப்பு கே.பி.பார்க் ஹவுசிங் போர்டு மற்றும் சூளை பகுதிகளில் அன்னம் தரும் அமுதகரங்கள் நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதையடுத்து அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், "13 போற்றி புத்தகங்கள் தமிழில் அறிமுகப்படுத்தியுள்ளோம். இதனை கொண்டு வந்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யக்கூடியவரின் பெயர் மற்றும் அலைபேசி எண்ணை காட்சிப் படுத்தியுள்ளோம். யார் தமிழில் அர்ச்சனை செய்ய விரும்பினாலும் தமிழ் வழி அர்ச்சகர் மூலம் வழிபடலாம். அதே நேரம் சமஸ்கிருத மொழி வழிபாட்டுக்கும் நாங்கள் எந்த தடையும் செய்யவில்லை.
நங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. ஒரு மொழியை திணிக்கும்போது அதனை எதிர்த்து நிற்கிறோம். எங்கும் தமிழ் எதிலும் தமிழ், அது தான் நம் அரசு. ஆகவே தமிழும் அர்ச்சனையில் இருக்கும். வாழ்க தமிழ் வளர்க தமிழ் இது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொள்கை. இந்தி மொழியை திணிப்பவர்களுக்கு 2026 தேர்தலில் மக்கள் தகுந்த பதிலடியை தருவார்கள்." என்றார்.

அப்போது, செய்தியாளர்கள், அண்ணாமலை சீமானிடம் "ஃபைட் பண்ணுங்கண்ணா" எனக் கூறியது பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, "சீமான், அண்ணாமலை இருவரும் Shadow fighters. அவர்கள், நிழலோடு யுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் நிஜத்தோடு யுத்தம் செய்து கொண்டிருக்கிறோம். அவர்களது யுத்தத்திற்கும், திமுகவின் திராவிட மாடல் யுத்தத்திற்கும் பல வேறுபாடுகள் இருக்கின்றன." எனத் தெரிவித்தார்.
பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று இரவு சென்னையில் நடந்த பாஜக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்றார். அப்போது, காரில் அமர்ந்திருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டதும் அவரை நோக்கிச் சென்று, கைகுலுக்கினார் அண்ணாமலை. அப்போது அண்ணாமலை சீமானை நோக்கி "ஃபைட் பண்ணுங்கண்ணா, ஸ்ட்ராங்கா இருங்க. விட்டுடாதீங்கண்ணா" என்று கூறிவிட்டுச் சென்றார். சீமான் - அண்ணாமலையின் இந்த திடீர் சந்திப்பும், பேச்சும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. இந்நிலையில் தான் அதுகுறித்த கேள்விக்கு சேகர்பாபு பதில் கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications