கொதித்த தமிழ்நாடு.. திருமண மண்டபத்தில் மது! அரசாணை மாற்றம் - எங்கு அனுமதி? விளக்கிய செந்தில் பாலாஜி
சென்னை: தமிழ்நாட்டில் திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானங்களை பரிமாற சிறப்பு அனுமதி வழங்கி வெளியிடப்பட்ட அரசாணை கடும் எதிர்ப்புகளுக்கு பிறகு திரும்பப்பெறப்பட்ட நிலையில், இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் கொடுத்து உள்ளார்.
திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மது பானங்களை பரிமாற சிறப்பு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை இன்று காலை முதல் பெரும் விவாத பொருளாக மாறியது. இதனை கண்டித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வந்த நிலையில் தற்போது சிறப்பு மதுபான அனுமதியை அரசு ரத்து செய்து உள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், "வணிக வளாகங்கள் உட்பட மாநாடுகள் நடைபெறும் இடங்கள், கூட்ட அரங்குகள், விருந்து மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றில் மதுபானம் வைத்திருப்பதற்கும் பரிமாறுவதற்குமான சிறப்பு உரிமம், கர்நாடகா மகாராஷ்டிரா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், புதுதில்லி போன்ற சில மாநிலங்களில் நடைமுறையில் உள்ளவாறு. தமிழ்நாட்டிலும் வழங்கி 18-3-2023 அன்று அரசிதழில் பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கையில், திருமணக் கூடங்களும், இதர இடங்களும் இடம் பெற்றிருந்தன.
இதுகுறித்து பெறப்பட்ட கருத்துக்களைக் கவனமுடன் பரிசீலித்த தமிழ்நாடு அரசு தற்போது அவற்றை நீக்கி, வணிக வளாகங்களில் (Commerclal Complexes) உள்ள மாநாட்டு மையங்கள் (Corvention centres), கூட்ட அரங்குகள் (Conference Halls) ஆகியவற்றில் நடைபெறும் தேசிய நிகழ்வுகள், பன்னாட்டு நிகழ்வுகள், உச்சி மாநாடுகள் மற்றும் சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறும் விளையாட்டு மைதானங்கள் / விளையாட்டு அந்த நிகழ்வுகள் நடைபெறும்போது மட்டும் மதுபானம் வைத்திருந்தல் மற்றும் பரிமாறுவதற்கான தற்காலிக உரிமம் வழங்கப்படும் என்று திருத்தப்பட்ட அறிவிக்கையினை இன்று வெளியிட்டுள்ளது."
அதேபோன்று, இதுகுறித்து மேற்குறிப்பிட்ட அரசிதழில் வெளியிடப்பட்டிருந்த வணிகப் பகுதிகள் அல்லாத இடங்களில் நடைபெறும் கொண்டாட்டங்கள், விழாக்கள், விருந்துகள் போன்றவற்றில் மதுபானம் வைந்திருந்து பரிமாறுவதற்கான சிறப்பு உரிமம் வழங்குவதற்கான முறையையும், இந்த திருத்தப்பட்ட அறிவிக்கையில் நீக்கம் செய்து தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இதுபற்றி விளக்கம் கொடுத்தார். அதில்,
"வணிக வளாகங்கள் உட்பட மாநாடுகள் நடைபெறும் இடங்கள், கூட்ட அரங்குகள், விருந்து மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றில் மதுபான வைத்திருப்பதற்கும் பரிமாறுவதற்குமான சிறப்பு உரிமம் கர்நாடகா, மகாராஷ்டிரா புது தில்லி போன்ற சில மாநிலங்களில் உள்ளது.
தமிழ்நாட்டிலும் அவ்வாறு வழங்கிட 18.03.2023 அன்று அரசிதழில் பிறப்பிக்கப்பட்ட அறிக்கையில் திருமண கூடங்களும் இதர இடங்களும் இடம் பெற்றன. இது குறித்து பெறப்பட்ட கருத்துக்களை பரிசீலித்த தமிழ்நாடு அரசு தற்போது அவற்றை நீக்கி வரைமுறைப்படுத்தி உள்ளது." என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications