இதனால் தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.. அதிமுக எம்.எல்.ஏ கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்
சென்னை : மின்சார கட்டணத்தை மாற்றியமைக்காவிட்டால் கடன் வழங்கப்படாது என்ற மத்திய அரசின் அழுத்தம் காரணமாகவே, மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறோம் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் ஆகியவற்றின் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.

மத்திய அரசின் அழுத்தத்தால்
சட்டப்பேரவையில் இன்று, மின்சார கட்டண உயர்வு தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏ தங்கமணி கேள்வி எழுப்பினார். அவருக்கு பதிலளித்துப் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 84% அளவுக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது ஒரு கோடி மக்களுக்கு 0% என்ற நிலையிலேயே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மின்சார கட்டணத்தை மாற்றியமைக்காவிட்டால் கடன் வழங்கப்படாது என்ற மத்திய அரசின் அழுத்தம் காரணமாகவே, மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது.

வரும் காலங்களில்
கோடைக்காலத்தில் எந்த விதமான மின் பாதிப்பும் ஏற்படாத வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார். மின் உற்பத்தியை பெருக்க கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு தற்போது உள்ள 18 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. வரும் காலங்களில் 24 மணி நேரமாக்க நடவடிக்கை மேற்கொள்வோம். மலைப்பகுதியில் இருக்கும் உயர்கம்பிகளை, புதைவட கம்பியாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்." என்றார்.

முன்னுரிமை
மேலும் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, பவானிசாகர் தொகுதி, ஆச்சனூரில் துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கு முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 316 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு, 89,000 மின் கம்பங்கள் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது எனத் தெரிவித்தார்.

3 துணை மின் நிலையங்கள்
இதேபோல. பல்லாவரம் எம்.எல்.ஏ இ.கருணாநிதி பேசுகையில், சென்னை கீழ்கட்டளை அஸ்தினாபுரம் பகுதியில் துணை மின் நிலையங்கள் அமைக்க இடம் கையகப்படுத்தபட்டது. அங்கு டெண்டர் விட்டு எப்போது பணிகள் தொடங்கப்படும் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி, அங்கு நிலம் கண்டறியப்பட்டு, வகை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதிப்பிடும் பணி செய்ததும் பணிகள் தொடங்கும் என்றார். மேலும் பல்லாவரம் தொகுதிக்கு முதல்வர் 3 துணை மின் நிலையங்கள் அமைக்க அனுமதி தந்திருக்கிறார் எனவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications