ரிசல்ட் வரட்டும்! "கச்சேரி" இருக்கு! திமுகவில் விஸ்வரூபம் எடுக்கும் அந்த அமைச்சர்..சிஎம் டீம் ஹாப்பி
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவிற்கு பின் திமுகவில் அமைச்சர் ஒருவருக்கு முக்கியமான சில பதவிகள், சலுகைகள் வழங்கப்படலாம் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன. இன்று காலை 8 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கி நடக்க உள்ளது. இன்று காலை 10 மணிக்கு பின் முன்னணி நிலவரங்கள் தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே நேரத்தில் 14 வாக்குச் சாவடிகளின் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் 14 மேஜைகளில் வைக்கப்படும். நகராட்சி, மாநகராட்சிகளில் அதிகபட்சம் 4 சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை அதிமுக
இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிகம் எதிர்ப்பார்த்து இருக்கும் மாநகராட்சி கோவைதான். ஏனென்றால் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக கோவையில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. அப்போதைய ஆளும் அதிமுக தரப்பிற்கு எதிராக கடும் எதிர்ப்பலை நிலவி வந்த நிலையிலும் திமுகவால் இங்கு வெற்றிபெற முடியவில்லை. கரூரில் திமுக சிறப்பான வெற்றியை பெற்றாலும் கூட கோவையில் எதுவும் செய்ய முடியவில்லை.

பெரிய சவால்
இதையடுத்தே இந்த முறை கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளை கவனிக்கும் பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கொடுக்கப்பட்டது. அங்கு முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி இருக்கிறார். ஆட்சியில் இல்லை என்றாலும் இப்போதும் வேலுமணியின் கோட்டையாகவே திமுக இருந்து வருகிறது. இதனால்தான் முதல்வர் ஸ்டாலினே கோவை மீது தனி கவனம் செலுத்தி வருகிறார். அவரை மீறி..எம்எல்ஏக்கள் யாரும் இல்லாத போது மாநகராட்சியை கைப்பற்றுவது என்பது பெரிய டாஸ்க்.

செந்தில் பாலாஜிக்கு டாஸ்க்
அந்த பெரிய டாஸ்க்கிற்கு சரியான ஆள் செந்தில் பாலாஜிதான் என்று கருதி அவருக்கு இந்த தேர்தல் பொறுப்பு கொடுக்கப்பட்டது. இந்த நிலையில்தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவையில் கரூர் மாடலை செந்தில் பாலாஜி இறக்கியதாக கூறப்படுகிறது. ஒரு இடம் விடாமல் தொடர்ந்து பிரச்சாரம் செய்யும் aggressive பிரச்சார யுக்தியை செந்தில் பாலாஜி கையில் எடுத்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வீடு வீடாக திமுக களத்தில் நின்றது. இதற்காக அவர் கரூரில் இருந்து ஆட்களை இறக்கி இருக்கிறார்.

கரூர் மாடல்
கரூரில் தனக்கு நெருக்கமாக இருக்கும் 4 முக்கிய தலைகளையும், அவர்களுக்கு கீழ் பெரிய டீமையும் செந்தில் பாலாஜி களமிறக்கியதாக கூறப்படுகிறது. ஒரு மாதமாக கோவையில் தீவிர பிரச்சாரங்கள், களப்பணிகள் செய்த நிலையில் கள நிலவரம் கொஞ்சம் திமுகவிற்கு சாதகமாக மாறியதாக கூறப்படுகிறது. அதிலும் கடைசி ஒரு வாரம் எஸ்பி வேலுமணி தரப்பு கொஞ்சம் பின்னடைவை சந்தித்ததாகவும், கடைசி நாள் அவர் சிறையில் இருந்ததும் திமுகவிற்கு சாதமாக மாறியதாகவும் கூறப்படுகின்றன.

கொங்கு முழுக்க பரவும்
இந்த நிலையில்தான் ஒருவேளை செந்தில் பாலாஜி தனக்கு கொடுத்த இந்த டாஸ்க்கில் வெற்றிபெற்று, கோவையை கைப்பற்றினார் என்றால் அவருக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கட்சியில் செந்தில் பாலாஜி புதிய விஸ்வரூபம் எடுக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது கட்சியில் ஒரு உயர் பதவி வழங்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் செந்தில் பாலாஜியின் தேர்தல் பணிகள் முதல்வர் தரப்பை குஷிப்படுத்தி உள்ளது.

உச்சத்திற்கு போகும் வாய்ப்பு
அதை மாநகராட்சி தேர்தலிலும்.. அதிலும் கோவையில் நிகழ்த்தி காட்டினால் தேர்தல் முடிந்ததும் செந்தில் பாலாஜி கச்சேரிதான் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிஎம் அவர்களின் டீம் இதை தனிப்பட்ட வகையில் கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் திமுகவில் இருக்கும் வேறு சில தலைகள்.. ஏற்கனவே அதிமுகவில் இருந்து வந்த பலருக்கு அமைச்சர் பதவி கொடுத்து அலங்கரித்து உள்ளனர். இப்போது செந்தில் பாலாஜிக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

சிலருக்க பிடிக்கவில்லை
இப்படியே போனால் கட்சியில் பாலாஜி டாப்பிற்கு வந்துவிடுவார் என்று குமுறலில் இருப்பதாக கூறுகிறார்கள். இதை பற்றிய தகவல் முதல்வர் ஸ்டாலின் தரப்பிற்கும் முன் கூட்டியே சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் சில திமுக தலைகளை சமாதானம் செய்யும் வகையில் அவர்களுக்கும் சில பதவிகள், அமைச்சரவையில் சில மாற்றங்கள் வரும் நாட்களில் செய்யப்படும் என்று அறிவாலய வட்டாரங்கள் அப்டேட் கொடுத்து உள்ளன.












Click it and Unblock the Notifications