தீபாவளி டாஸ்மாக் மது விற்பனை... "எல்லாமே பொய்!" வறுத்தெடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி
சென்னை: டாஸ்மாக் விற்பனை தொடர்பாக இணையத்தில் தகவல் பரவிய நிலையில், இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்து உள்ளார்.
நாடு முழுவதும் இந்தாண்டு நேற்று 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியது.
பிரதமர் நரேந்திர மோடி எல்லையில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார். அவர் தமிழக வீரர்களுக்கு இனிப்பு ஊட்டிய வீடியோவையும் பகிர்ந்து இருந்தார்.

தீபாவளி
கொரோனா பெருந்தொற்று காரணமாகக் கடந்த இரு ஆண்டுகளாகப் பெரியளவில் தீவாபளி கொண்டாட்டம் இல்லாமல் இருந்தது. இந்தாண்டு கொரோனா கிட்டதட்ட முடிந்துவிட்டது. பெரும்பாலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுவிட்டன. இதனால் கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டு விட்டது. இதனால் இந்தாண்டு தீபாவளி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. கடந்த சில நாட்களாகவே கடை வீதிகளில் அள்ளிய கூட்டமே இதற்குச் சாட்சி.

டாஸ்மாக்
தீபாவளி, பொங்கல், நியூ இயர் போன்ற விடுமுறை நாட்களில் மது விற்பனை என்பது வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். விடுமுறை என்பதால் இந்த சமயத்தில் மது விற்பனை அதிகமாக இருக்கும்.. இதனிடையே சில நாட்களுக்கு முன்பு தீபாவளிக்காக டாஸ்மாக் கடைகளில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியானது.

டாஸ்மாக் விற்பனை
இருப்பினும், அது பொய்யான தகவல் என்றும் இதுபோல எந்தவொரு இலக்கும் நிர்ணயம் செய்யப்படவில்லை என்றும் அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்கிடையே மீண்டும் தீபாவளி பண்டிகை காலத்தில் சுமார் ரூ 700 கோடி அளவில் மது விற்பனை நடந்து உள்ளதாக சில தனியார் ஊடகங்களில் செய்தி வெளியானது. தீபாவளிக்கு முந்தைய நாள் மட்டும் 200 கோடிக்கு விற்பனையாகி இருந்ததாக கூறப்பட்டு இருந்தது.

உண்மைக்குப் புறம்பான செய்தி
இந்தச் சூழலில் இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்து உள்ளார். இந்த செய்தி உண்மைக்குப் புறம்பான ஒன்று என்றும் பொய்யான தகவலை தெரிவித்த டிவி சேனல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "'தீபாவளிக்கு முன்பாக 'டாஸ்மாக் இலக்கு' என்று உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்டு, அதனைச் சுட்டிக்காட்டிய பிறகு தனியார் தொலைக்காட்சி நீக்கியது.

தவறான பிம்பம்
தீபாவளி முடிந்தவுடன் நிர்வாகத்திற்கே முழு விவரங்கள் வந்து சேராத சூழலில் 'விற்பனை விவரம்' என்று பொய்யான தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்கிறது. அரசு நிறுவனங்கள் மீது தவறான பிம்பத்தை உருவாக்கும் வகையில் உண்மை நிலையை அறியாமலும், குறைந்தபட்ச அறம் கூட இல்லாமலும் குறிப்பிட்ட தனியார் தொலைக்காட்சி செயல்படுவது தவறு.

நடவடிக்கை
டாஸ்மாக் மீது உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்பி வருவதால் தனியார் தொலைக்காட்சி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று அவர் பதிவிட்டு உள்ளார். இதன் மூலம் டாஸ்மாக் விற்பனை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ள தகவல் பொய் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications