'முன்மாதிரி அமைச்சர்..மூன்றே ஆண்டுகளில் மின்மிகை மாநிலம்..' செந்தில்பாலாஜியை பாராட்டி தள்ளிய உதயநிதி
சென்னை: தமிழ்நாடு மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அனைத்து அமைச்சர்களுக்கும் எடுத்துக்காட்டாக செயல்படுகிறார் என்றும் இன்னும் மூன்றே ஆண்டுகளில் தமிழ்நாட்டை மின்மிகை மாநிலமாக அமைச்சர் மாற்றிக்காட்டுவார் என்று சட்டசபை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே பல இடங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாகப் புகார் எழுந்துள்ளன. கடந்த ஆட்சியில் மின் பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளாமல் இருந்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்பட்டது.
இந்தச் சூழலில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் TNEB சார்பில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

முன்மாதிரி அமைச்சர்
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பேசிய சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி, "சட்டசபை உறுப்பினர்கள் நாங்கள் தான் மக்களுடன் நேரடியாகத் தொடர்பில் இருக்கிறோம். எனவே, எங்களுக்குத் தான் தொகுதியில் என் பிரச்சினை என்பது தெரியும். பொதுவாக மின் இணைப்பில் எதாவது பிரச்சினை இருந்தால், நாங்கள் தான் மின் துறை அமைச்சர், அதிகாரிகளைத் தொடர்பு கொள்வோம். ஆனால், அமைச்சர் செந்தில் பாலாஜி முதல் முறையாக எங்களிடம் நேரடியாகக் குறை கேட்கிறார். அனைத்து அமைச்சர்களும் அவர் எடுத்துக்காட்டாக செயல்படுகிறார்.

பாராட்டித் தள்ளிய உதயநிதி
கொரோனா பாதிப்பு மோசமாக இருந்த காலத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது. கொரோனா மிகப் பெரிய சிக்கலாக இருந்ததால், அனைத்து அமைச்சர்களுக்கும் கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டன. இதனால் அமைச்சர்கள் தங்கள் துறைகளைக் கவனிக்க முடியாத நிலை இருந்தது. ஆனால், அப்போதும்கூட கொரோனா பணிகள், மின் துறை என இரண்டையும் சிறப்பாகக் கையாண்டார்.

மூன்றே ஆண்டுகள்
மின் துறைக்குத் தொடங்கப்பட்டுள்ள கால் சென்டரில் இதுவரை 40,500 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 75% குறைகள் தீர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வரும் காலங்களில் தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்குவது குறைக்கப்படும். சோலர், காற்றாலை போன்ற கிரீன் எனர்ஜி மூலம் மின்சார உற்பத்தி அதிகரிக்கப்படும். இன்னும் மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டை மின்மிகை மாநிலமாக அமைச்சர் செந்தில் பாலாஜி மாற்றிக்காட்டுவார்" என்றார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
அதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "மின் வாரியத்தை 1.59 லட்சம் கோடி கடன் சுமையில் அதிமுக விட்டுச் சென்றுள்ளது. கடந்த 10 நாட்களில் திட்டமிட்டதைக் காட்டிலும் அதிக பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்மிகை மாநிலம் எனக் கடந்த ஆட்சியில் அதிமுக அமைச்சர்கள் பேசினார்கள். நம் தேவையை நாமே உற்பத்தி செய்யும்போது மின்மிகை மாநிலம் எனக் கூற வேண்டும். அந்த நிலை விரைவில் எட்டப்படும்" என்றார்.

ராஜேஷ் லக்கானி
முன்னதாக இந்தக் கூட்டத்தில் பேசிய மின்வாரிய மேலாண் இயக்குநர் ராஜேஷ் லக்கானி, மின்சார வாரிய வரலாற்றிலேயே முதல்முறையாக இதுபோன்ற கூட்டம் நடைபெறுவதாகக் கூறினார். மேலும், கடந்த 10 நாட்களில் பராமரிப்பு பணிகளில் சென்னை மண்டலத்தில் 2. 35 லட்சம் இடங்களில் மின் இணைப்புகளோடு தொடர்பிலிருந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளன என்றார்.












Click it and Unblock the Notifications