போக்குவரத்து ஊழியர்களுக்கு நல்ல செய்தி வந்தாச்சு! இன்றே 10 பேருக்கு அரியர்ஸ் தொகை வழங்கிய அமைச்சர்!
சென்னை: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்களுக்கு புதிய பேருந்துகள் வாங்குவது குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் பணியாற்றும் பணியாளர்கள் ஓய்வெடுக்கும் ஓய்வறைகளில் குளிர்சாதனப் பெட்டி பொருத்தப்படும் என்ற அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், இன்று அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் மத்திய பணி மனையில் இருக்கும் பணியாளர்கள் ஓய்வறையில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றிய காலத்தில் மறைந்த தொழிலாளர்களின் வாரிசுகள் 5 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. 14வது ஊதியக்குழு பேச்சுவார்த்தையின்படி, ஊதிய உயர்வு அரியர்ஸ் தொகை வழங்கப்படுவதற்கு அடையாளமாக இன்று 10 பேருக்கு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 1 லட்சத்து 14 ஆயிரம் பேருக்கு நிலுவைத் தொகை வழங்கப்பட உள்ளது. 171 கோடி ரூபாய் முதல்வர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க வழங்கப்பட உள்ளது என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
போக்குவரத்துத்துறையை தனியார் மயமாக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும், போக்குவரத்துத்துறையில் தற்காலிக ஒப்பந்தப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள், இது தற்காலிக ஏற்பாடுதான் என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
மேலும், போக்குவரத்துத்துறைக்கு புதிய பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர் நடைமுறைகள் நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் எந்த நிறுவனம் டெண்டர் எடுத்திருக்கிறது என்ற அறிவிப்பு வெளியிடப்படும்.
இன்னும் 4 மாதத்திற்குள்ளாக 15 ஆண்டு காலம் ஓடிய பேருந்துகள் கழிவு செய்யப்படும். புதிதாக வாங்கும் பேருந்துகள் அந்த இடத்தை நிரப்பும். 4200 பேருந்துகள் புதிதாக வாங்கப்பட உள்ளன. 200 அரசு விரைவுப் பேருந்துகள் வாங்கப்பட உள்ளன எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications